103. தேவா சிறியோம் பிழையை - பாடல் 10
பெருமானை வணங்காததால்
பாடல் 10:
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணை மேல் இருந்து நடம் செய் முதுகுன்றே
விளக்கம்:
Advertisement
பண்டைய நாளில் பெருமானை வணங்காததால், திருமாலும் பிரமனும் பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்ற செய்தியை முந்தைய பாடலில் குறிப்பிட்ட சம்பந்தருக்கு, தான் வாழ்ந்த காலத்தில் இருந்த சமணர்களும் புத்தர்களும் பணியாமல் நின்று, பெருமானை தங்களது சிந்தையில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்த பரிதாப நிலை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் குரங்குகள் நடமாடும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், அந்த நடனம் சமணர்களின் நிலை குறித்து ஏளனம் செய்யும் நடனம் என்பதாக குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. கருகும் உடல்=வெய்யிலில் ஆடையின்றி திரிவதால் கருமை நிறம் கொண்ட உடல்; உருகும்=இரக்கம் கொள்ளும்; முருகு-அகில் மரம்; பணை=கிளை; சம்பந்தர் காலத்தில் காஞ்சிபுரத்தில் அப்பர் பிரானுக்கு சமணர்கள் இழைத்த பல கொடுமைகளும், மதுரை நகரில் சைவ சமயத்தை அவர்கள் ஒடுக்கிய தன்மையும், சமணர்கள் எவ்வாறு சிறிதும் இரக்கமின்றி அடுத்த மதத்தினரை நடத்தினார்கள் என்பதை உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
வெய்யிலில் உடையின்றி திரிவதால் கரிய உடலினை உடையவர்களும், கஞ்சி உணவு உட்கொள்ளும் போது இடையே கடுக்காய் தின்னும் பழக்கம் உடையவர்களும் மற்ற மதத்தவர் மீது இரக்கம் கொள்ளாமல் இருப்பவர்களும் ஆகிய சமணர்கள், தங்களது மனதினில் இறைவனை சிந்தனை செய்யாமல் இருந்தமையால் அவர்களுக்கு அயலானாக விளங்கிய பெருமான் உறையும் தலமாகிய முதுகுன்றில், சற்று வளைந்த நிலையில் உள்ள மூங்கில்கள் மேலும் சிறிது வளையும் வண்ணம் அருகில் உள்ள அகில் மரத்தின் கிளையில் உள்ள குட்டி குரங்குகள், குதித்து நடமாடுகின்றன.