100. படையார் தருபூதப் - பாடல் 2
கலைமான் கன்றினை
பாடல் 2:
இலையார் தரு சூலப் படை எம் பெருமானாய்
நிலையார் மதில் மூன்று நீறாய் விழ எய்த
சிலையான் எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்
கலையான் அடி ஏத்த கருதா வினை தானே
விளக்கம்:
Advertisement
நிலையார்=உண்மை நிலை இல்லாதவர்கள்; திருமால் செய்த மாயத்தால் மதி மயங்கி புத்த மதத்தினைச் சார்ந்து சைவ நெறியினை விட்டு விலகிய திரிபுரத்து அரக்கர்களை நிலையான கொள்கை அற்றவர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கலையார்= கலைகளின் பொருளாக உள்ளவர் என்றும் கலைமான் கன்றினை கையில் ஏந்தியவர் என்றும் இரண்டு பொருள்களும் பொருத்தமாக உள்ளன. நிலையார் என்றார் சொல்லுக்கு நிலை இல்லாதவர் என்று பொருள் கொண்டு, உணமையான நிலையான கொள்கை இல்லாதவர்கள் என்று சிவக்கவிமணி அவர்கள் தனது பெரிய புராண விளக்கம் நூலில் பொருள் கூறுகின்றார். ஆனால் பலரும், நிலை+ஆர் என்று பிரித்து நிலையான மதில்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர். தாங்கள் பெற்றிருந்த வரத்தின் தன்மையால் அழியாத நிலையினை உடைய மதில்களை உடைய திரிபுரத்து அரக்கர்களாக அவர்கள் திகழ்ந்த நிலை இதனால் உணர்த்தப் படுகின்றது. இறவாத நிலை என்றும் அழியாத நிலை இறைவன் ஒருவனுக்கே உரித்தானது. அவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் அழியும் தன்மை கொண்டவை. என்றாவது ஒருநாள் அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும், எவ்வாறு இறப்பு இல்லாத வாழ்க்கையை அடுத்தவர்க்கு வரமாக அளிக்க முடியும். அதனால் தான் கடுமையான தவம் புரிந்து வரங்களை பெறுகின்ற அரக்கர்கள், நடப்பதற்கு மிகவும் அரிதான ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டு அத்தகைய நிகழ்ச்சி ஏற்பட்டால் தான் தங்களுக்கு மரணம் என்று வரம் வேண்டுகின்றனர். ஆனால் சர்வ வல்லமை பெற்ற இறைவனுக்கு முடியாத காரியம் என்பது இல்லை என்பதால், எத்தகைய அரிய நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை நிகழ்வித்து, அரக்கர்கள் இறக்கும் வண்ணம் பெருமான் செய்கின்றார். எனவே நிலையற்ற, என்ற எதிர்மறைப் பொருளே மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது.
பொழிப்புரை:
இலை வடிவமாக அமைந்து கூரிய நுனியினை உடைய சூலப்படையினை உடையவனும், எமது பெருமானும், நிலையற்ற கொள்கையை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் சாம்பலாக மாறும் வண்ணம் எரித்த அம்பு பொருத்தப் பட்ட வில்லினை உடையவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தில் திகழும் திருக்கோயிலில் உறைபவனும், கலைகளின் வடிவமாக இருப்பவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை கருதி வணங்கி போற்றும் அடியார்களை, வினைகள் தாங்கள் தாங்கும் இடமாக கருதாது விலகி ஓடி விடும்.
Audio