100. படையார் தருபூதப் - பாடல் 10
புத்தர் மற்றும் சமணர்
பாடல் 10:
புத்தர் அருகர் தம் பொய்கள் புறம் போக்கிச்
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும்
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன் தன் அடியே அடைவோமே
விளக்கம்:
சுத்தி தரித்து=உயிர்களை தூய்மை செய்து; அருகர்=சமணர்கள்; அருகக்கடவுளை போற்றி வணங்குவதால் அவர்களுக்கு அருகர் என்ற பெயர் வந்தது. புத்தர் மற்றும் சமணர் கூறும் உரைகளால் களங்கம் ஏதும் அடையாமல் தூய்மையாக இருப்பவன் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சமணர்களும் புத்தர்களும் பெருமானைக் குறித்து கூறும் இழிவான சொற்கள் உண்மையை ஆதாரமாகக் கொண்டிருந்தால் பெருமானுக்கு களங்கம் ஏற்படும். அவ்வாறின்றி பொய்யினை ஆதாரமாகக் கொண்ட சொற்களால் களங்கம் எவ்வாறு விளையும். அத்தன்=தலைவன்
Advertisement
பொழிப்புரை:
புத்தர்கள் மற்றும் சமணர்கள் கூறும் பொய்யான சொற்களை பொருட்படுத்தாமல் புறத்தே தள்ளி விலக்கியதுமன்றி, அத்தகைய சொற்களால் களங்கம் ஏதுமின்றி தூய்மையின் வடிவமாக இருப்பவன் பெருமான். ஒளி வடிவினனாக இருக்கும் பெருமான், உமை அம்மையுடன் கூடி நித்த மணாளனாக எருக்கத்தம்புலியூர் தலத்தில் விளங்குகின்றான். அத்தகைய தலைவனும் அறத்தின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்று அடைந்து நாம் பயன் பெறுவோமாக.
Audio