முகப்பு
தினம் ஒரு தேவாரம்

91. தோடுடைய செவியன் - பாடல் 2

திருமாலின் வாயினில்

Updated On : 21 மார்ச், 2018 at 6:07 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM

பாடல் 2:

       முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு
       அவை பூண்டு
       வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம்
       கவர் கள்வன்
       கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால்
       தொழுது ஏத்த
       பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன்
       இவன் அன்றே

விளக்கம்:

Advertisement

முற்றல்=முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ஏனம்=பன்றி; முளைக் கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும் மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது. இளநாகம்=அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால், நரை திரையின்றி இருக்கும் பாம்பு. பல சதுர் யுகங்களையும் கடந்து நிற்கும் அனந்தன் முதலிய பாம்புகள் இளநாகம் என்று அழைக்கப் படுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். வற்றலோடு=தசை வற்றிய ஓடு; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பெருமான் கிள்ளியதால், அந்நாள் வரை உடலுடன் கொண்டிருந்த தொடர்பு நீங்கியதால், உலர்ந்து காணப்படும் ஓடு; சிவபெருமானது புகழினை எடுத்துரைக்கும் நூல்களை கற்றவர்களையும் கேட்டவர்களையும் கற்றல் கேட்டார் உடையார் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெற்றம்=இடபம்.    

பொழிப்புரை:

பண்டைய நாளில் ஆமையாக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கியதன் அடையாளமாக ஆமை ஓட்டினைத் தனது மார்பினில் அணிகலனாக அணிந்தவனும், நரையும் திரையும் இல்லாத உடலினைக் கொண்டுள்ளதால் என்றும் இளமையாக காணப்படும் நாகங்களை அணிந்தவனும், வராக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கியதன் அடையாளமாக கொம்பு போன்று முளைத்த பன்றியின் கடைப் பல்லினை ஆபரணமாக அணிந்தவனும், தசை வற்றிய பிரமனின் மண்டையோட்டினைத் தான் பிச்சை ஏற்கும் கலனாகக் கொண்டவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தை கவர்ந்து கொண்டான். இறைவனின் புகழினைக் கற்றும் கேட்டும் அறிந்த பெரியவர்கள் பெருமானது திருப்பாதங்களைத் தங்களது கைகளால் தொழுது வணங்குகின்றனர். அவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு இடபத்தில் ஊர்ந்தவாறு எப்போதும் இருக்கும் பெருமான் தான் பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் எனது பெருமைக்குரிய தலைவன் ஆவான்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.