முகப்பு
தினம் ஒரு தேவாரம்

95. காரைகள் கூகை முல்லை - பாடல் 7

இறைவனுக்கு சூட்டப்படும்

Updated On : 19 மே, 2018 at 2:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:24 PM


பாடல் 7:

    தகைமலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம்
          கொடுகொட்டி வீணை முரல
    வகைமலி வன்னிக் கொன்றை மதமத்தம்
           வைத்த பெருமான் உகந்த நகர் தான்

    புகைமலி கந்த மாலை புனைவார்கள் பூசல்
           பணிவார்கள் பாடல் பெருகி
    நகைமலி முத்து இலங்கு மணல் சூழ்
          கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

Advertisement

தகை=பெருமை; தகைமலி=பெருமைகள் மலிந்த, நிறைந்த பெருமைகள் உடைய; நகை= வெண்மை; கொடுகொட்டி=திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடிய கூத்து; கந்தம்=நறுமணம்; கொடுகொட்டி என்பதற்கு இசைக் கருவி என்று பொருள் கொண்டு, வீணையுடன் கொடுகொட்டி கருவியினை இசைக்கும் பெருமான் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. பூசல்=ஆரவாரம் மிகுந்த ஓசை; புகை மலி கந்த மாலை=வேள்வியிலிருந்து எழும்பும் புகை காற்றினில் ஒன்றற கலப்பது போன்று, தமது நறுமணத்தை காற்றினில் கலக்கும் பூக்கள்; படப்பை=தோட்டம்; 

இறைவனுக்கு சூட்டப்படும் மாலைகளை, அடியார்கள் தாங்களே கட்டும் பழக்கம் பண்டைய நாளில் இருந்தது போலும்; அவர்கள் அவ்வாறு மாலைகளை தொடுக்கும் போதும், மாலைகளுக்கு தேவையான மலர்களை பறிக்கும் போதும், இறைவனின் புகழினை பாடிக் கொண்டு இருந்தமை, திருவாசகம் பூவல்லி பதிகத்திலிருந்து அறியப்படுகின்றது. அந்த பதிகத்தின் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பொந்து=இறைவன் உறையும் கோயில்; பரவி=புகழ்ந்து; தன்னுடைய தந்தை தாய் சுற்றம் மற்றுமுள்ள நண்பர்கள் நமது பொருட்கள் ஆகிய அனைத்தின் மீது தான் கொண்டிருந்த பாசத்தினை ஒரு சேர அறுத்து தன்னை ஆண்டு கொண்ட பிரான் இறைவனின் அருட்செயலைக் குறிப்பிடும் மணிவாசகர், இடைமருது தலத்தில் உள்ள இறைவனின் புகழினைப் போற்றியவாறு பூக்களை பறிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த பாடலிலிருந்து தாங்கள் தினசரி செய்யும் செயல்களுடன் இறைவனைப் புகழ்ந்து பாடுவதையும் கலந்து செய்வது அந்நாளைய பழக்கம் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.   

    எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய
    பந்தம் அறுத்து என்னை ஆண்டு கொண்ட பாண்டிப் பிரான்
    அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த
    பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ  

பொழிப்புரை:

பெருமை மிக்க தண்டு சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியவனும், தீயினைப் போன்று கொடிய விடத்தினை உமிழும் நாகத்தினை அடக்கி ஆபரணமாக ஏற்றுக் கொண்டவனும்,  வீணையின் இசைக்கு ஏற்ப கொடுகொட்டி எனப்படும் நடனத்தை திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடியவனும், பல வகையான வன்னி கொன்றை ஊமத்தை ஆகிய மலர் மாலைகளை அணிந்தவனுமாகிய இறைவன் உகந்து உறையும் நகர் நனிபள்ளி ஆகும். வேள்விகளில் எழுப்பப்படும் புகை காற்றினில் கலப்பது போன்று தங்களின் நறுமணத்தை காற்றினில் கலக்கும் சிறந்த பூக்களை மாலையாக புனையும் அடியார்கள் பாடும் ஆரவாரம் மிகுந்த பாடல்களும் பெருமானை பணிந்து வணங்கும் அடியார்கள் பாடும் பாடல்களின் ஓசையும் கலந்து ஒலிப்பதும், புன்னகை பூக்கும் போது தெரியும் வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் முத்துக்கள் மண்ணில் விழுந்து கிடக்கும் தோட்டங்களும் நிறைந்த நனிபள்ளி நகரமே, இறைவன் மிகுந்த விருப்பம் கொண்டுள்ள தலமே, நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.