95. காரைகள் கூகை முல்லை - பாடல் 10
வடிவினன் சிவபெருமான்
பாடல் 10:
அனமிகு செல்கு சோறு கொணர்க என்று கையில்
இட உண்டுபட்ட அமணும்
மணமிகு கஞ்சி மண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேத நான்கும் விரிவித்த நாவின் விடையான்
உகந்த நகர் தான்
நனமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி
போலும் நமர்காள்
விளக்கம்:
அனமிகு=அன்னமாக; செல்கு=வயிற்றின் உள்ளே செல்லும்; மண்டை=பனை ஓலையால் செய்யப்பட்ட உண்கலம்; மனமிகு=மனம் மகிழ்ந்து; வினை=செயல்முறைகள்; இறைவனை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய செயல்கள்; நன மிகு=தெளிந்த ஞானம் உடைய;
Advertisement
பொழிப்புரை:
பல இல்லங்களின் வாயிலில் சென்று நின்று, தங்களது உடலின் உள்ளே சென்று வயிறு நிறைக்கும் வண்ணம் அன்னம் கொணர்க என்று கேட்டு, அவ்வாறு கொண்டுவரப்பட்ட சோறு தங்களது கையினில் இடப்பட அதனை உண்டு திரியும் சமணர்களும், மனம் மிகவும் மகிழ்ந்து தங்களுக்கு அளிக்கப்படும் கஞ்சியை தங்கலாது மண்டைப் பாத்திரத்தில் ஏற்று உண்ணும் புத்தர்களும் சொல்லும் சொற்களை பொருட்படுத்தாது நிற்கும் வடிவினன் சிவபெருமான்; இறைவனை வழிபடும் போது நாம் செய்ய வேண்டிய செயல்முறைகளை விவரிக்கும் நான்கு வேதங்களையும் விரித்து சொன்ன நாவினை உடையவன் பெருமான்; அவன் விடையினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான்; அவன் மிகுந்த விருப்பமுடன் உறையும் தலமே நனிபள்ளி ஆகும். தெளிந்த ஞானம் உடையவர்களாய் பெருமானின் திருவடிகளை புகழ்ந்து போற்றும் அடியார்கள் நிறைந்த நகரமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.