95. காரைகள் கூகை முல்லை - பாடல் 9
சிவபெருமான் உறையும்
பாடல் 9:
நிறவுரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்ற தொகுநீர்மை
சீர்மை நினையார்
அறவுறு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
அண்ணல் நகர் தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை
கொன்றை துன்று பொதுளி
நறவிரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி
போலும் நமர்காள்
விளக்கம்:
Advertisement
நீர்மை=இயல்பு, குணம், தன்மை; சீர்மை=சிறப்பு; அறவுறு வேதம்=அறம் பொருந்திய வேதங்கள்; புற=புறவம், தோட்டம்; துன்று=அடர்ந்து; பொதுளி=நெருங்கி;
பொழிப்புரை:
செம்மை நிறமும் நெருப்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்து தங்களிடையே நின்ற உருவத்தின் தன்மையையும் பெருமையையும் உணர முடியாத வண்ணம், அறங்களை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் எதிரே நின்ற சிவபெருமான் உறையும் நகரம் நனிபள்ளி; முல்லை, மௌவல், குளிர்ந்த அசோக மலர்கள், புன்னை, பெருமான் புனையும் கொன்றை ஆகிய மலர் கொடிகளும் செடிகளும் அடர்ந்தும் நெருங்கியும் வளர்வதால் அந்த மலர்கள் விரிந்து மகரந்தங்களை உதிர்த்து புதிய நறுமணங்களை பரப்பும் சோலைகள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.