112. பொடியுடை மார்பினர் - பாடல் 8
கயிலாய மலையினை
பாடல் 8:
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி
வயல் விரி நீள் நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்
விளக்கம்:
Advertisement
சயவிரி மலர்=வாகை மலர்; வாகை மரம் இந்த தலத்தின் தலமரம் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த குறிப்பு அமைந்துள்ளது. வரை=மலை; ஒல்க=அசைய; அடர்த்து=நெருக்கி; ஆர்தல்=உண்ணுதல்; ஐ=தலைவன்; ஆர்தலை=உண்ணும் செயலை உடைய தலைவன்; அயல்=உறவினர் அல்லாதார், ஊரார்கள்;
பொழிப்புரை:
உயர்ந்த கயிலாய மலையினை அசைத்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின், கடகங்கள் அணிந்திருந்த கைகளை மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனே என்றும், ஊரார்கள் இடும் பிச்சை ஐயம் ஆகியவற்றை உட்கொள்ளும் தலைவனே என்றும், புகழ்ந்து அவனது திருவடிகளைப் போற்றி, வயல்களில் விளைவதும் நீண்டு விரிந்ததும் ஆகிய கருநீல மலர்கள் போன்ற கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் சிறந்த வாகை மலர்களை தூவி, தாழ்ந்த சடையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி, அந்த திருவடிகளை சார்ந்து இருப்போமாக.