113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 10
சம்பந்தர் காலத்தில்
பாடல் 10:
ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேத முதல்வன்
காடதனின் நடம் ஆடும் கண்ணுதலான் கடம்பூரே
விளக்கம்:
Advertisement
அறம் காட்டும் அவர்கள்=தாம் தரும் நெறியில் நிற்பது போன்று காட்டிக் கொள்ளும் சமணர்கள்; அவர்களது தோற்றம் புறத்தோற்றமே அன்றி அகத்தில் உண்மையில் தருமநெறியினை பின்பற்றாதவர்களாக சமணர்கள் அப்பர் மற்றும் சம்பந்தர் காலத்தில் இருந்தமை பெரியபுராணத்தில் பல இடங்களில் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது. சோடை=வறண்ட நிலை; பொருளற்ற பேச்சுகள்;
பொழிப்புரை:
ஆடைகளை தவிர்த்தவர்களும் தரும நெறியில் இருப்பது போன்று புறத்தோற்றம் உள்ளவர்களும் ஆகிய சமணர்களும், சிகப்புச் சாயம் ஊட்டப்பட்ட துவர் ஆடையினை அணியும் புத்தர்களும், பொருளற்ற வறண்ட சொற்களையே பேசுவார்கள்; மேலும் அவர்கள் நல்ல நெறியினை, உயிருக்கு இன்பம் விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் நன்னெறியினை காட்ட மாட்டார்கள்; எனவே அவர்கள் பேசும் பேச்சுகளும் உண்மையான பேச்சுகள் அல்ல என்பதை உணர்வீர்களாக. அடியார்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப பல வேடங்களில் அடியார்களுக்கு காட்சி தருபவனும். ஏனைய தேவர்களிலிருந்து பல தன்மைகளில் மாறுபட்டு இருப்பவனும், வேதங்களில் உணர்த்தப் படும் முழுமுதற் கடவுளும் காட்டினில் நடனம் ஆடுபவனும், தனது நெற்றியில் கண் உடையவனும் ஆகிய பெருமான் கடம்பூர் தலத்தில் உறைகின்றான்.