112. பொடியுடை மார்பினர் - பாடல் 2
திருப்பாதங்களில் நறுமணம்
பாடல் 2:
அரை கெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவு அசைத்து ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்திப் போர்விடை ஏறிப் புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்
விரை கமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்
விளக்கம்:
புரை=ஓட்டை; தசைகள் நீக்கப்படுவதால் ஏற்பட்ட ஓட்டை, சேர்த்தல்=மனதினால் சேர்ந்து பிரியாது இருத்தல், இடைவிடாது தியானித்தல்; வரை=மலை, இமயமலை; விரை=மணம்
Advertisement
பொழிப்புரை:
இடையில் கட்டிய கோவண ஆடையின் மேலோர் அரவத்தினைச் சுற்றி தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைப்பவனும், ஓட்டை உடைய வெண்தலை ஓட்டினைத் தனது கையில் ஏந்தி பலி ஏற்கச் செல்பவனும், போர்க்குணம் கொண்ட இடபத்தின் மீதேறி எங்கும் திரிபவனும், அனைவரும் புகழும் வண்ணம் மலை மங்கை என்று அழைக்கப்படும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, விரிந்த சடையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி இடைவிடாது அவனது திருவடிகளை தியானித்து இருப்போமாக,