முகப்பு
தினம் ஒரு தேவாரம்

112. பொடியுடை மார்பினர் - பாடல் 4

கொன்றைப் பூ

Updated On : 28 அக்டோபர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:40 PM

பாடல் 4:

    தாரிடு கொன்றை ஒர் வெண்மதி கங்கை தாழ்சடை மேல் அவை சூடி
    ஊரிடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி 
    வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்
    காரிடு மாமலர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்

விளக்கம்:

Advertisement

காரிடு மாமலர்=கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ; ஊரார்கள் இடும் பிச்சையை சிறந்த செல்வமாக மதிப்பவன் பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சென்ற பாடலின் விளக்கத்தில், பெருமான் பிச்சையாக ஏற்று உலகத்தவரை உய்விப்பது, அவர்களின் ஆணவம் முதலாகிய மலங்கள் என்பதை கண்டோம். உயிர்களும் தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு பெருமானைச் சென்றடைந்து நிரந்தரமான இன்பத்தை அடைவதை விரும்புவது போன்று, பெருமானும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்புகின்றான். எனவே தான், உயிர்கள் தனது பிச்சைப் பாத்திரத்தில்  மலங்களை இட்டு உய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும் இறைவன், அவ்வாறு இடப்படும் மலங்களை பெரிய செல்வமாக மதித்து மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றான் என்பதே இந்த பாடலின் உட்கருத்தாக நாம் கொள்ளவேண்டும்.      

பொழிப்புரை:

கொன்றை மாலையையும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தனது தாழ்ந்த சடையின் மீது சூடியவனும், ஊரார்கள் இடும் பிச்சையினை பெரிய செல்வம் என்றும் தனக்கு தகுந்த உணவு என்று பலவாறும் குறிப்பிட்டு மகிழ்பவனும், கச்சணிந்த மென்மையான மார்பகங்களை உடையவளாகிய உமை மாதினை ஒரு பாகமாகத் தனது உடலில் ஏற்றவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் கார்க்காலத்தில் தோன்றும் சிறந்த கொன்றை மலர்களை தூவி, தனது கழுத்தினில் நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.