112. பொடியுடை மார்பினர் - பாடல் 6
பிரளய காலத்து
பாடல் 6:
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா
வளை ஒலி முன் கை மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்
தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன தாள் இணை சார்வோம்
விளக்கம்:
Advertisement
அளை=புற்று; களை தலை=களையப்பட்ட பிரமனின் தலை; அலர்=தாமரை மலர்; மிசை= இடம்; மலர் மிசை அந்தணன்=திருமாலின் கொப்பூழ்ப் பூவில் தோன்றிய பிரமன். தளை= மொட்டு; தளையவிழ் மாமலர்=மொட்டாக இருந்து அப்போது விரிந்து மலர்ந்த மலர்கள்;
பொழிப்புரை:
புற்றில் வளர்கின்ற நாகத்தைத் தனது இடையினில் கச்சையாக கட்டி, தனது விருப்பம் போன்று பாம்பினை அசைத்தவனே என்றும், பிரளய காலத்து அனலில் நின்று ஆடுபவனே என்றும், திருமாலின் கொப்பூழ்ப் பூவில் தோன்றிய அந்தணனாகிய பிரமனின் உச்சியில் இருந்த தலையினைக் கிள்ளி அந்த தலையின் உலர்ந்த மண்டையோட்டில் பலி ஏற்கும் கருத்தினை உடையவனே என்றும், அடியார்களின் உள்ளத்தைக் கொள்ளும் கள்வனே என்றும், அடியார்கள் தொழுதேத்த ஒலிக்கும் வளையல்களை முன்கையினில் அணிந்து இளமையும் அழகும் பொருந்தி விளங்கும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் மொட்டாக இருந்து அப்போது தான் விரிந்து மலர்ந்த சிறந்த புதிய மலர்களை தூவி, நமது தலைவனாகிய இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி அந்த திருவடிகளைச் சார்ந்து வாழ்வோமாக..