முகப்பு
தினம் ஒரு தேவாரம்

121. அரனை உள்குவீர் - பாடல் 7

கருணை உள்ளம்

Updated On : 21 பிப்ரவரி, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:40 PM


பாடல் 7:

    கரிய கண்டனைச் 
    சிரபுரத்துள் எம்
    அரசை நாடொறும்
    பரவி உய்ம்மினே    

விளக்கம்:

Advertisement

இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இறைவன் உயிர்களுக்கு வழங்கும் அருள் இருக்கும் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனின் அருளினை முழுமையாக பெறுவதற்கு பக்குவம் அடையவேண்டும் அல்லவா. அந்த பக்குவத்தினை அடையும் பொருட்டு, நாம் இறைவனை தினமும் தொழ வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மனம் இறை சிந்தனையில் ஆழ ஆழ, உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனைப் பற்றிய நமது அறிவு விரிவடைகின்றது. அறிவு விரிவடைவதால் மெய்ப்பொருளை சென்று அடைந்து நிலையான இன்பம் பெற மனம் நாட, அதன் முதற்படியாக உயிர் பக்குவம் அடைகின்றது. எனவே தான் இறைவனைப் புகழ்ந்து பாடி உய்வினை அடையுமாறு சம்பந்தர் இந்த பாடல் மூலம் நம்மை ஊக்குவிக்கின்றார். கரிய கண்டன் என்ற தொடர் மூலம், உலகின் நலன் கருதி விடத்தையே உட்கொண்ட பெருமானின் கருணை உள்ளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் கழுத்தினில் இருக்கும் விடத்தின் கறை, பெருமான் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உட்கொண்டதையும் அந்த செயல் வானவர்கள் மற்றும் அனைத்து உலகத்தவர்களின் நலன் கருதி செய்யப்பட்டது என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது அல்லவா.
   
பொழிப்புரை:

கரிய கண்டத்தை உடையவனாக தனது கருணைத் திறத்தினை உணர்த்தும் பெருமானை, சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனை, எமது அரசினை தினமும் புகழ்ந்துப் பாடி, உலகத்தவரே வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.