130. தண்ணார் திங்கள் - பாடல் 3
இறைவனின் நடனத்திற்கு
பாடல் 3:
பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்தப் படு கானின்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன்னிடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னிக்
கல்லியல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார் கோயிலே
விளக்கம்:
Advertisement
பாணி என்ற வடமொழிச் சொல் பொதுவாக கைகள் என்று பொருள் தந்தாலும் இங்கே கைகளால் இசைக்கப்படும் தாளத்தை குறிப்பிடுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; எல்லி=இரவு; கல்லியல் இஞ்சி=கல் மதில்; மஞ்சு=மேகம்; படுகான்=பிணங்கள் இடப்படும் சுடுகாடு; கொல்லை=முல்லை நிலம், காடும் காடு சார்ந்த இடம்; சென்ற பாடலில் அடியார்கள் இறைவன் சன்னதியில் பாடுவதை குறிப்பிட்ட சம்பந்தருக்கு இறைவனின் நடனத்திற்கு பூதகணங்கள் பாடுவது நினைவுக்கு வந்தது போலும். இந்த பாடலில் பூதகணங்கள் நடமாட சுடுகாட்டினில் இறைவன் ஆடும் நடனத்தை குறிப்பிடுகின்றார். மௌவல்=காட்டு மல்லிகை
பொழிப்புரை:
பெருமானைப் புகழ்ந்து, பலவகையான பாடல்களை பூதகணங்கள் தங்களது கைகளில் தாளம் இட்டவாறு பாட, அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில் நடமாடும் பெருமான், எங்கள் தலைவன், உறையும் இடம் கண்ணார்கோயில் என்று கூறுவார்கள். முல்லை நிலத்து பூக்களாகிய முல்லை, மல்லிகை, காட்டு மல்லிகை ஆகிய கொடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து செழிப்புடன் வளரும் சோலைகள் கொண்ட கண்ணார்கோயில் வானளாவ மேகத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்த கல் மதில்கள் கொண்டதாகும்.