142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 5
தலைச்சங்கை தலத்தில்
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:54 PM
பாடல் 5:
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண்ணீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச் சங்கை
கோலம் சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே
விளக்கம்:
Advertisement
ஆலம்=நீர்; கோலம்=அழகு; மன்னும்=பொருந்தும்;
பொழிப்புரை:
மூவிலை வேல் சூலம் ஏந்திய கையினை உடையவரே, திருநீற்றுப் பொடியினால் அபிஷேகம் செய்து கொண்டு மகிழ்பவரே, கொடிய ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடையவரே, நீண்ட சடையினில் கங்கை நீரினை தேக்கி அடக்கியவரே, நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் அன்னங்கள் பொருந்தி வாழும் சோலைகள் உடைய தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகிய கோயிலை நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர்.