முகப்பு
தினம் ஒரு தேவாரம்

143. கொடியுடை மும்மதில் - பாடல் 5

நடனம் ஆடும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான்

Updated On : 29 அக்டோபர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 4:04 PM

பாடல் 5:

    செற்றெரியும் திரையார் கலுழிச் செழுநீர் கிளர் செஞ்சடை மேல்
    அற்றறியாது அனல் ஆடு நட்டம் அணியார் தடங்கண்ணி
    பெற்றரிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும்
    வற்று அறியா புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே

விளக்கம்:

Advertisement

செற்று=மோதி, கரைகளில் மோதி; எறியும்=வீசும்; திரை=அலைகள்; கலுழி=காட்டாறு; செழுநீர்=செழுமையான கங்கை நீர்; கிளர்=பொருந்தி விளங்கும்; அற்றுதல்=நீங்குதல்; அற்று அறியாது=நீங்குதலை அறியாது; தடம்=அகன்ற; பெற்று=பெற்றவன்; வற்று=வற்றுதல்; அற்றறியாது என்ற சொல்லினை கங்கை நதியின் தன்மையுடன் இணைத்து, என்றும் நீங்குதலை அறியாது கங்கை நதி பெருமானின் சடையில் தங்குகின்றது என்று கூறும் விளக்கம் பொருத்தமானதே.   

பொழிப்புரை:

கரைகளில் மோதி நீரினை வீசி எறியும் அலைகள் கொண்டுள்ள காட்டாறு போன்று வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தனது செஞ்சடையில் பொருந்தி நிலையாக விளங்கும் வண்ணம் தேக்கி வைத்தவர் சிவபெருமான்; அவர் தனது கையினில் தீப்பிழம்பினை, நீக்காது எப்போதும் ஏந்திய வண்ணம் நடனம் ஆடும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான். அழகு வாய்ந்த அகன்ற கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக பெற்றவர் சிவபெருமான்; அவர் இடபத்தினை தனது வாகனமாக ஏற்றவர். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் இருக்கும் இடம், வற்றல் என்பதை அறியாது எப்போதும் நீர் பெருகும் நீர்நிலைகளை உடைய வலம்புரம் நன்னகரம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.