முகப்பு
thinkedu

கல்வியை விட விரைந்து முடிவெடுக்கும் திறன் மாணவர்களுக்கு அவசியம்: ஆளுநர் பேச்சு

கல்வியை விட நிலைமைக்கு ஏற்ப விரைந்து முடிவெடுக்கும் திறன் மாணவர்களுக்கு அவசியம் என்று கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். 

Updated On : 28 ஜூலை, 2025 at 4:24 AM
பகிர்:


கல்வியை விட நிலைமைக்கு ஏற்ப விரைந்து முடிவெடுக்கும் திறன் மாணவர்களுக்கு அவசியம் என்றும் கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இதன்பிறகு அவர் பேசியதாவது:

"தாராளமயக் கல்வியில் நம் நாடு நேர்மையான மற்றும் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அவசியம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

Advertisement

தாராளமயக் கல்வியில் நாம் பெற்ற சாதனைகளைப் பற்றி சிந்திக்கும்பொழுது ஒரு ஊக்குத்தை தருகின்றது. குழந்தைகளுக்கு சரியான ஒழுக்கநெறிகளை கற்பிப்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் சமமான கல்வி மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

நாம் நல்ல கல்வியினை பெற்றதால் மட்டுமே சாதி,மதம், பாலின பேதமின்றி பலருக்கு கல்வி கற்பிப்பதற்கு நம்மால் என்ன முடியும் என்று விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இந்தியாவில் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அழிக்க கல்வி மட்டுமே ஒரே வழி. 

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. நாட்டில் ஒரு மாணவர் கல்வி கற்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது. ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் சரியாக வகுப்புக்கு வரவில்லை என்றால் அந்த ஆசிரியர் அதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவரின் பெற்றோருடன் பேசி அவரை பள்ளிக்கு வரவழைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மாணவர்களை தொடர்ந்து கண்காணிப்பது ஆசிரியரின் கடமையாக இருக்கும். இன்னும் பல கிராமப்புற பகுதிகளில் மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. எனவே அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர ஆசிரியர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். இது அவர்களின் அடிப்படை கடமையாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கேற்ப பெற்றோர்கள் குருவை அடையாளம் காண்பிக்கின்றனர். ஆனால், கடவுள் யார் என்று மாணவருக்கு அடையாளம் காட்டுவது ஆசிரியர்தான். 

ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வழங்கி பாகுபாடின்றி சமமாக நடத்தும் ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். அதுவே நாம் இந்தியனாக இருக்க பெருமையடையச் செய்யும். மாணவர்கள் இதனை செய்தால், இவ்வுலகினை அனைவரும் வாழத்தகுந்த இடமாக மாற்றமுடியும். 993 பல்கலைக்கழகங்களைக் கொண்டு இந்தியா அதிக உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அதேபோன்று, இந்தியாவில் தமிழகம் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் சராசரியை விட தமிழகத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். 

மாணவர்களே எதிர்கால இந்தியாவை வழிநடத்துகிறார்கள். அவர்களே எதிர்கால இந்தியாவை உருவாக்குகிறார்கள். எனவே, நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் கல்வி பெற பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக, கல்வியை விட நிலைமைக்கு ஏற்ப துரிதமாக முடிவெடுக்கும் திறன் மாணவர்களுக்கு அவசியம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments