'சமூக சேவை, எழுத்துப் பணிக்கு காதல் மனைவிதான் காரணம்'
சமூக சேவை, எழுத்துப் பணிக்கு காரணம் காதல் மனைவிதான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் பஞ்சுராஜா.
கம்பம்: சமூக சேவை, எழுத்துப் பணிக்கு காரணம் காதல் மனைவிதான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் பஞ்சுராஜா.
தேனி மாவட்டம் கம்பம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையில் உள்ளதால் இரு மாநில மக்களின் கலாசார மையமாக உள்ளது.
முல்லைப் பெரியாற்றங்கரையில் ஆதரவற்றோர் இல்லம் என குழந்தைகள், முதியவர்களுக்கு புகலிடம் என்றால் நேதாஜி இல்லம்தான். இதன் நிறுவனர் கவிஞர் சோ.பஞ்சுராஜா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், வரலாற்று ஆய்வாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர் பஞ்சுராஜா.
Advertisement
Advertisement
எப்படி இத்தனை முகம்?
இவரது தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஆதலால் இயற்கையாகவே நாட்டுப்பற்று, அவரது தந்தையைப் போலவே இலக்கியத்திலும் ஆர்வம் ஏற்பட்டது.
இதுபற்றி பஞ்சுராஜா கூறும்போது, எங்களுக்கு திருமணம் ஆகி சரியாக 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு தாய் மாமன் மகளாய் இருந்தாலும், இது காதல் திருமணம் என்றுகூட சொல்லலாம். காதலித்து, சொந்தங்களின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டு இன்று பேரன் பேத்திகளோடு சொந்தங்களின் உறவோடு வாழ்கிறோம் என்றார்.
மேலும் பேசும்போது, 'எவ்வளவோ எதிர்ப்புகள்.. அதையும் கடந்து ஒரு ஆசிரியர் பணியில் நான் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது என்னுடைய துணைவியார்தான்.
கடந்த 1990 - இல் 60 வயதானவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுபதில் ஆரம்பித்து இன்றைக்கு, இந்த 2023 வரைக்கும் ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்கான இல்லம், படிக்க வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கான உதவிகள் என இருவரும் சேர்ந்து செய்தோம். எங்களின் இரு மனமும் ஒரு மனமாக இருந்ததால்தான் இதை செய்ய முடிந்தது.
அது மட்டும் இன்றி கரோனா கால கட்டத்தில் 2 ஆண்டுகள் தேனி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் நாள்தோறும் காலை, மாலை தெருவோரத்தில் இருக்கும், ஏழை எளியவர்களுக்கான உணவு வழங்குவதிலிருந்து கபசுர குடிநீர் வழங்கியதிலிருந்து தற்போது வரை சேவையைத் தொடர்கிறோம். என்னுடைய சேவைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது என்னுடைய துணைவியார்' என்று கூறுகிறார்.
30 ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவசமாக தங்கி பயனடையும் வகையில் ஒரு இல்லத்தை கட்டுவதற்கு முழுமுதற் காரணமாக அவருடைய காதல் மனைவி ரீத்தாள் உதவியாக உள்ளார்.
எழுத்தாளர், வரலாறு ஆய்வாளர் பணி
தேனி மாவட்ட வரலாற்று ஆய்வாளராக பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி கிடைத்த விஷயங்களை நூலாக எழுதி வரலாற்று ஆய்வு எழுத்தாளராக இருக்கிறார். இதற்கும் மனைவிதான் காரணம் என்கிறார் பஞ்சுராஜா.
இனிதான இந்த காதல் தம்பதியினரின் குடும்பப் பயணத்தோடு, சமூக சேவை பணி, வரலாறு ஆய்வுப் பணி தொடர காதலர் தினத்தில் வாழ்த்துவோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.