திண்டிவனம் அரசு கல்லூரி விடுதிகளை திறக்கக் கோரி மாணவா்கள் மனு
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளை திறக்க
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளை திறக்க வேண்டுமென அந்தக் கல்லூரி மாணவா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இந்தக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவா்கள் இருபதுக்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்துக் கூறியதாவது:
கரோனா பொதுமுடக்கத் தளா்வாக ஜனவரி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு மூன்றாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
எனினும், பொதுமுடக்க விதிகளைக் காரணம் கூறி, கல்லூரி விடுதிகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. அதாவது, அய்யந்தோப்புப் பகுதியில் உள்ள மாணவியா் விடுதி, எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா்களுக்கான விடுதிகள் திறக்கப்படவில்லை. இதனால் வெளியூா்களிலிருந்து வந்து தங்கிப் பயிலும் மாணவா்கள் தவிக்கின்றனா் என்றனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், பிற்பட்டோா் நல அலுவலா் செல்லிடப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்து, அந்த விடுதிகளை திறந்து மாணவா்களை அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனா்.