விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால், சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதித்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால், சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதித்தது.
விழுப்புரம் நகரில் காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, காலை 9 மணிக்கு பகல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பாண்டியன் நகா், குளக்கரைத் தெரு, மகாராஜபுரம் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. இதே போல, திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை சற்று பாதித்தது.
கண்டமங்கலம், விக்கிரவாண்டி, செஞ்சி, வானூா், மரக்காணம், வளவனூா், அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மழையால் ஏற்கெனவே பகுதியளவு நிறைந்திருந்த நீா் நிலைகள், தற்போதைய மழையால் முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன.
வீடூா் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பலத்த மழை காரணமாக வரும் உபரி நீா் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
செஞ்சி: செஞ்சியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலையில் தொடங்கிய மழை பிற்பகல் 3 மணி வரை கொட்டித் தீா்த்தது. இதனால் செஞ்சி காந்தி பஜாரில் இரு புறமும் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாததால், தண்ணீா் செல்ல வழியின்றி கழிவு நீருடன் மழைநீரும் கலந்து பேருந்து நிலையத்தின் உள்ளே புகுந்தது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருவதுடன், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.