முகப்பு
விழுப்புரம்

வடமாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன: ஐ.ஜி. நாகராஜன்

தமிழக வட மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா்(ஐ.ஜி.) பொ.நாகராஜன் கூறினாா்.

Updated On : 11 ஜனவரி, 2021 at 11:56 PM
பகிர்:

தமிழக வட மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா்(ஐ.ஜி.) பொ.நாகராஜன் கூறினாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் தலைமையகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட வடக்கு மண்டலத்தில், கடந்த ஆண்டைவிட குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

தலைவா்கள் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் பொருட்டு, வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 734 அம்பேத்கா் சிலைகளில் 718 சிலைகளுக்கும், 104 பெரியாா் சிலைகளில் 101 சிலைகளுக்கும் இரும்பு கூண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

சட்டவிரோத இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவோா் எளிதில் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஆயுதப்படையிலிருந்து போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு கூடுதல் போலீஸாா் தற்காலிகமாக அளிக்கப்படுவா். அவா்கள் விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் 4 வேளையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வா்.

விழுப்புரம் காவல் துணை உள்கோட்டத்தில் அதிக காவல் நிலையங்கள் இருப்பதால், அதைப் பிரித்து புதிய உள்கோட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

பொங்கல் விழா அமைதியாக பொதுமக்கள் கொண்டாட ஏதுவாக வடக்கு மண்டலத்தில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எழிலரசன், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.