வலுக்கும் போர்! நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
அதிமுகவில், நீங்கள் அளித்த பதவிகள் வேண்டாம், தொண்டர்களாக செயல்படுகிறோம் என்று எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு அதிமுக துணைப் பொதுச் செயலர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்து வேலுமணி அவரது ஆதரவாளர்கள் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம் உள்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். பிறகு, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் தவிர்த்து மற்றவர்கள் மீண்டும் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு இணைந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, அதிமுகவில் அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் உறுதிபடத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அவ்வாறு அறிவிக்கப்படாமல் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
அதிமுகவில் மீண்டும் இணையும்போது, அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தோம்.
ஆனால் தற்போது தாங்கள் அறிவித்துள்ள பொறுப்புப் பட்டியலைப் பார்க்கும்போது கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது போல தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் வகித்தப் பதவிகளை நீங்கள் திரும்ப வழங்கவில்லை. கால தாமதம் செய்கிறீர்கள். அதிமுக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களின்போது, பல முறை அவர்கள் வகித்த பதவிகளே வழங்கப்பட்ட போதிலும், நீங்கள் எங்களுக்கு அவ்வாறு பதவிகளை மீண்டும் வழங்கவில்லை.
இதனால் ஏராளமான அதிமுகவினர், தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
பொதுச் செயலராக நீங்கள் எடுத்த தவறான முடிவால்தான், 2021, 2024, 2026 தேர்தல்களில் அதிமுகவுக்கு தொடர் தோல்வி ஏற்பட்டு கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், தற்போது நீங்கள் அறிவித்த பொறுப்புகள் இதுபோல உள்ளது.
அதிமுகவில், உங்கள் தலைமையை மீண்டும் ஏற்று இணைந்தபிறகும், ஏற்கெனவே வகித்த பதவிகளை தரவில்லை, நீங்கள் அளித்த பதவிகள் வேண்டாம், கட்சித் தொண்டர்களாக செயல்படுகிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்தக் கடிதத்தில், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
SP Velumani and others writes letter to EPS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.