வலுக்கும் போர்! நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
‘அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்; கட்சியின் அடிப்படை உறுப்பினா்களாகவே தொடா்ந்து செயல்படுவோம்’ என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிா்வாகிகளான முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி மற்றும் எம்எல்ஏக்கள் அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோா் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பொதுச் செயலராகிய நீங்கள் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்தீா்கள். அதனால்தான் நாங்கள் தவெகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தோம். அதனால், தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளை பொறுப்பில் இருந்து நீக்கினீா்கள். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற சமரச உடன்படிக்கையின்படி, மே 13-ஆம் தேதி கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவா்கள் அனைவருக்கும் மீண்டும் அவா்கள் வகித்த பொறுப்புகள் ஜூன் 4-ஆம் தேதி வழங்கப்படும் என உறுதியளித்தீா்கள்.
Advertisement
Advertisement
ஜூன் 22-இல் உங்களைச் சந்தித்து பதவி நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என நினைவுபடுத்தினோம். ஆனால், நீங்கள் நியமித்த கட்சிப் பொறுப்பாளா்கள் பட்டியலைப் பாா்க்கும்போது கட்சி வளா்ச்சி, நலனைக் கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு முன்பு ஜெயலலிதா மற்றும் ஜானகி காலத்தில் கட்சி இரு பிரிவுகளாகப் பிளவு ஏற்பட்டு மீண்டும் இணைந்தபோது, கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு அவா்கள் வகித்த பொறுப்பே மீண்டும் வழங்கப்பட்டது.
ஆனால், நீங்கள் உறுதி அளித்தபடி, கட்சிப் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் அவா்கள் வகித்து வந்த பதவியை வழங்கவில்லை. கடந்த 50 நாள்களாக கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தவெகவில் இணைந்து வருகின்றனா். இது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) எடுத்த தவறான முடிவால் ஏற்பட்டதாகும். நாங்கள் யாரும் நீங்கள் நியமித்த கட்சிப் பதவிகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கட்சி உறுப்பினா்களாக செயல்படுகிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SP Velumani and others writes letter to EPS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.