அமைச்சர் ஆனந்த்தை சந்தித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்!
அமைச்சர் ஆனந்த் உடனான சந்திப்பு பற்றி எஸ்.பி. வேலுமணி விளக்கம்...
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் என். ஆனந்த்தை சந்தித்துப் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் இணைந்தது.
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், தங்கள் தரப்பு நிர்வாகிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்கக் கோரியும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தொடர்ந்து தலைமையிடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த சலசலப்புக்கு மத்தியில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த் அறைக்குச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் ஆனந்த்துடனான சந்திப்பிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
”அதிமுகவில் இருக்கிறது பிடிக்கவில்லையா?. அதிமுக எங்கள் கட்சி, வாட்ஸ்ஆப்பில் தேவையில்லாததை பரப்பி வருகிறார்கள். அதிமுக எங்கள் கட்சி, எங்களை வளர்த்த கட்சி. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, திமுகவுக்கு சாதகமான சூழல் ஏற்படக் கூடாது என்பதற்காக மட்டும்தான் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம்.
தவெக அரசு தற்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகாலமாக வளர்ச்சியை ஏற்படுத்தினோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் பழையபடி வளர்ச்சியை புதிய அரசு கொடுக்க வேண்டும். அத்திக்கடவு திட்டம் தொடர்பாகதான் அமைச்சரை சந்தித்தோம்” என்றார்.
Why did he meet Minister Anand? S.P. Velumani explains!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.