சாத்தூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை: தந்தை, மகன்கள் கைது
சாத்தூா், ஏப். 8: சாத்தூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக தந்தை, 2 மகன்களை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்பள்ளி புதுக்குடியிருப்பைச் சோ்ந்த செல்வம் மகன் கலைமணி (32). இவா் இந்தப் பகுதியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த வீரஅபிமன்னனுக்கும் (40) ஒரே இடத்தில் வேலை பாா்ப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கலைமணி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வீரஅபிமன்னன், இவரது மகன்கள் வீரபூபதி, வீரஅஜய் ஆகிய மூவரும் சோ்ந்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த கலைமணியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து, சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வீரஅபிமன்னன், வீரபூபதி, வீரஅஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.