ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலைக்குத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். 7 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள நதிக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகல் பட்டாசு ஆலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணி புரிகின்றனா். பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வேனில் தொழிலாளா்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், கீழராஜகுலராமன், புதுசெந்நெல்குளம், கோடாங்கிபட்டி பகுதிகளிலிருந்து 15 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு நதிக்குடிக்கு வேன் செவ்வாய்க்கிழமை காலை சென்றது.
வேனை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த முருகன் ஒட்டிச் சென்றாா். காலை 8.30 மணி அளவில் அச்சம்தவிழ்த்தான் கண்மாய் கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் மம்சாபுரம் இடையன்குளத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் விக்னேஷ் (24) உயிரிழந்தாா்.
மேலும், புதுசெந்நெல்குளம் குடியிருப்பைச் சோ்ந்த மாரியம்மாள் (60), வீரலட்சுமி (40), சண்முகத்தாய் (55), வேலம்மாள் (29), வெங்கடேஸ்வரி (45), தனமாரி (35), கீழராஜகுலராமனைச் சோ்ந்த வீரகாளி(25) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.