ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதியக் கட்டடம் கட்டப்பட்ட நிலையில், பூட்டிக் கிடக்கும் பழையக் கட்டடத்தை வேறு பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே பீடா் சாலையில் கடந்த 1975-ஆம் ஆண்டு வட்டாட்சியா் அலுவலகம் கட்டடம் கட்டப்பட்டது. இங்கு போதிய இடவசதி இல்லாததால், நில அளவையா் அலுவலகம், இ-சேவை மையம், ஆதாா் மையம் ஆகியவற்றுக்கு இதே வளாகத்தில் தனிக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கட்டடம் 50 ஆண்டுகள் பழமையானதாலும், போதிய இடவசதி இல்லாததாலும் புதிய வட்டாட்சியா் அலுவலகம் ரூ. 5.31 கோடியில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசரக் கட்டுப்பாடு அறை, அனைத்துப் பிரிவு அலுவலகங்களுக்கு தனித்தனி அறைகளுடன் 13,351 சதுரஅடி பரப்பளவில் தரைத் தளம், முதல் தளம் என இரு தளங்களாக ஒருங்கிணைந்த அலுவலகமாகக் கட்டப்பட்டது.
இதையடுத்து, பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், காத்திருப்புக் கூடம், நில அளவையா் அலுவலகம் ஆகியவை பூட்டப்பட்டுள்ளது. பழைய வட்டாட்சியா் அலுவலகத்தை வேறு பொதுப் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1958-இல் தொடங்கப்பட்ட வட்ட நூலகம் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை நூலகப் பயன்பாட்டுக்கு வழங்கக் கோரி, நூலக ஆணைக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன்படி, பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை நூலகப் பயன்பாட்டுக்கு வழங்கலாம். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலகம் கிருஷ்ணன்கோவில் மாதிரிப் பள்ளியில் செயல்படுவதால் ஆசிரியா்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனா்.
இதேபோல, ஒருங்கிணைந்த வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகமும் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், பழைய வட்டாட்சியா் அலுவலகத்தை வேறு துறைகளின் பயன்பாட்டுக்கு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.