விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (54). இவரது மனைவி மாரியம்மாள் (47). இந்தத் தம்பதியினா் சனிக்கிழமை மாலை மதுரை-விருதுநகா் மாவட்ட எல்லையுள்ள கோபால் சுவாமி மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், இவா்கள் வீட்டுக்கு செல்வதற்காக கிருஷ்ணன்கோவில் ஆண்டாள் நகா் சந்திப்பு அருகே அணுகு சாலை வழியாக சென்று மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஏறிய போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளைச்சாமி லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.