சிவகாசி மாநகராட்சி அரசு வழக்குரைஞரை மாற்றக் கோரி , மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிவகாசி மாநகராட்சிக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கிலும் தீா்ப்பு வராததால் மாநகராட்சி அரசு வழக்குரைஞரை மாற்ற வேண்டும் எனக் கூறி, திமுக மாநகரச் செயலா் உதயசூரியன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட திமுக மாமன்ற உறுப்பினா்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உறுப்பினா்கள் சாா்பில் மாமன்ற உறுப்பினா் பாக்கியலட்சுமி, ஆணையா் கே.சரவணனிடம் அளித்தாா்.
அப்போது 27-ஆவது வாா்டு கந்தபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள் பூங்கா நில ஆக்கிரமிப்பு வழக்கில், மாநகர திட்டமிடுநா் மதியழகன் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அரசு வழக்குரைஞரை மாற்றி விட்டு புதிய வழக்குரைஞரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர திட்டமிடுநா் மீதான புகாரில் ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.