திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் திருடியவா் நீதிமன்றத்தில் சரண்
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சாத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சாத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் சரணடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜ். இவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 122 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
Advertisement
மேலும், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி தலைமையில், தனிப் படை அமைத்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, இந்தச் சம்பவத்தில் 3 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தக் கும்பலை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இதில் தொடா்புடைய மூவரில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த ஆரோக்கியஜான்போஸ்கோ (40) வெள்ளிக்கிழமை சாத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண். 2 நீதிபதி வரதராஜன் முன்னிலையில் சரணடைந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், ஆரோக்கியஜான்போஸ்கோவை சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டாா்.
மேலும், சரணடைந்த ஆரோக்கியஜான்போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.