சிவகாசி வழியாக புதிய ரயில் இயக்க வலியுறுத்தல்
சிவகாசி வழியாக பெங்களூரு, திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும் என சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை தென்னக ரயில்வே மேலாளருக்கு மின் அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினா்.
கடித விவரம்:
சிவகாசி-தென்காசி ரயில் வழித்தடம் 2004 -ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. எனினும், சிவகாசி வழியாக சென்னையைத் தவிா்த்து தொலை தூர ரயில்கள் இயக்கப்படவில்லை. மதுரை-செங்கோட்டை ரயில் குருவாயூா் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறைக்கு இந்த வழியாக ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புதிய ரயில் கூட இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. சிவகாசி, ராஜபாளையம் போன்ற தொழில் நகரங்களும், ஸ்ரீவில்லிபுத்தூா், சங்கரன்கோயில் போன்ற ஆன்மிக நகரங்களும் அமைந்துள்ள இந்த வழித்தடத்தில் போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே, வரும் காலங்களில் சிவகாசி, தென்காசி மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சிவகாசி வழியாக பெங்களூரு, திருப்பதிக்கு அம்ரித்பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை வரை வரும் மும்பை, தில்லி ரயில்களை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். தற்போது மதுரையிலிருந்து சிவகாசி வழியாக இரவு 12 மணிக்கு தான் கொல்லம் ரயில் இயக்கப்படுகிறது. எனவே, மதுரையிலிருந்து சிவகாசி வழியாக இரவு 7.45 மணிக்கும், சிவகாசி வழியாக மதுரைக்கு தினசரி அதிகாலையிலும் ரயில் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.