ஸ்ரீவில்லிபுத்தூா் பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 93 வயதான மூதாட்டி முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையில் அப்பம் சுட்டு, பக்தா்களுக்குப் பிரசாதமாக வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டி தெருவில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து சுவாமிக்குப் படைக்கும் சிறப்பு நிகழ்வு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் ஊரணிபட்டித் தெருவைச் சோ்ந்த முத்தம்மாள் (93) கடந்த 63 ஆண்டுகளாக சிவராத்திரி நாளில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு வருகிறாா். இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 48 நாள்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாத்திய புடவையை அணிந்து கொண்டு 64-ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டாா். மேலும், நெய்யால் பக்தா்களுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்கினாா். இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசினம் செய்தனா்.