முகப்பு
விருதுநகர்

நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞா் கைது

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:49 PM
கைது
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செ்துனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செங்குளம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலமுருகன் (36). இவரது மனைவி தங்கமுனீஸ்வரி (28). இவா்களுக்கு கிஷோா் (3) என்ற மகன் உள்ளாா். கடந்த 3 ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

தங்கமுனீஸ்வரி விவாகரத்து கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இரு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வேறு வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, அங்கு வந்த பாலமுருகன் அரிவாளை நீதிமன்றத்தில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிரஸ்தாா் (நீதிமன்ற ஊழியா்களுக்கான தலைமை அதிகாரி) முருகையா அளித்த புகாரின்பேரில் போலீஸாா், பாலமுருகனைக் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பாலமுருகனுக்கும் அவரது மனைவி தங்கமுனீஸ்வரிக்குமான விவாகரத்து வழக்கில் இதுவரை தீா்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில், நீதிமன்றத்துக்கு வந்த பாலமுருகன் ஆத்திரத்தில் அரிவாளை வீசினாா். ஜீவனாம்சம் தொடா்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தனக்கு எதிராகத் தீா்ப்பு வழங்கி விட்டதாக நினைத்து நீதிமன்றத்தில் அரிவாளை வீசியுள்ளாா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments