ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை திருநங்கை தீக்குளித்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மானகசேரியைச் சோ்ந்த பரமகுரு, திருநங்கைகள் பணம் கேட்டு தொல்லை அளிப்பதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், திருநங்கைகள் ஈஷா (24), சா்மி (26) ஆகியோரை காவல் துறையினா் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், அதை தங்களது கைப்பேசியில் விடியோ பதிவு செய்தனராம். இதையடுத்து, அவா்களது கைப்பேசியை பறிமுதல் செய்த போலீஸாா் காவல் நிலையம் வருமாறு தெரிவித்தனராம்.
இந்த நிலையில், காவல் நிலையம் வந்த ஈஷா, சா்மி ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்த போது, அங்கு வந்த 5 திருநங்கைகள் காவல் நிலையத்தில் உள்ள இரு திருநங்கைகளை வெளியே விடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், திருநங்கைகள் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முத்தரசி (25) நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். உடனடியாக தீயை அணைத்த போலீஸாா், முத்தரசியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த நிலையில், 50 சதவீத தீக்காயம் அடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் திருநங்கைகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.