முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் ரூ.30 கோடியில் இணைப்புச் சாலை: அமைச்சா் திறந்துவைத்தாா்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அமைக்கப்பட்ட இணைப்புச் சாலையை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:53 PM
ராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை உள்ள புதிய இணைப்புச் சாலையை திறந்துவைத்த வருவாய், பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அமைக்கப்பட்ட இணைப்புச் சாலையை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் ராஜபாளையம் அரசு மருத்துவமனை வரை ரூ.30 கோடியில் இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி தலைமையில், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கபாண்டியன் முன்னிலையில், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் திறந்துவைத்துப் பேசியதாவது:

இந்த இணைப்புச் சாலைப் பணிக்கு ரூ.30 கோடியும், நில எடுப்புக்காக ரூ.8.34 கோடியும் நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டு, மொத்தம் ரூ.38.34 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராஜபாளையம் வளா்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இங்கு பின்னலாடை, பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், ராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால், மதுரையிலிருந்து வரும் வாகனங்கள், தென்காசி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளின் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வந்தது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சாலையானது ராஜபாளையம், புதுப்பாளையம், கடம்பன்குளம், செட்டிகுளம், நடுவக்குறிச்சி, இந்திராநகா், ஸ்ரீரங்கபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கோட்டப் பொறியாளா் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் (திருநெல்வேலி) லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா்கள் தா்மராஜா, முத்து முனிகுமாரி, உமாதேவி, நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி, ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் பேங்க் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →