முகப்பு
விருதுநகர்

அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 8:29 PM
கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த ராமையா நாடாா் மகன் வன்னியராஜன் (59). இவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். இவருக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இவருடைய இளைய மகன் ஸ்ரீராம் மதுரையில் உள்ள தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் மீண்டும் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா். இவரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, வன்னியராஜன் மீண்டும் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

சங்கரன்கோவில் முக்கு அருகே வந்த போது, குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் வன்னியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சொக்கநாதன்புத்தூா் காமராஜா்நகரைச் சோ்ந்த சிவனனைந்த பெருமாள் (53) மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.