முகப்பு
விருதுநகர்

அரசு மருத்துவமனையில் மின்தடை: கா்ப்பிணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மகப்பேறு பிரிவில் கா்ப்பிணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:26 PM
மின்தடை
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மகப்பேறு பிரிவில் கா்ப்பிணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் 135 படுக்கைகள் உள்ளன. தினசரி சராசரியாக 1500 போ் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனா். இங்கு மாதத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.

மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு ரூ.6.89 கோடி மதிப்பில் புதிதாக மகப்பேறு, குழந்தைகள் பிரிவு கட்டப்பட்டது. புதிய மகப்பேறு பிரிவு கட்டடம் முன்பு கழிவுநீா் கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்போது, மகப்பேறு பிரிவுக்கு செல்லும் மின் ஒயா் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக கா்ப்பிணிகள் பழைய கட்டடத்தில் உள்ள பிரசவ வாா்டுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.

மேலும், தற்காலிக மின் இணைப்பு மூலம் முக்கிய வாா்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 24 மணி நேரம் கடந்த பிறகும் சேதமடைந்த மின் இணைப்பு சரி செய்யப்படாததால் கழிவறை உள்ளிட்டவற்றில் மின் இணைப்பு இல்லாமல் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காளிராஜ் கூறியதாவது: மகப்பேறு பிரிவில் மின்சாரம் தடைபட்டவுடன் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதமடைந்த மின் இணைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.