ராஜபாளையத்தில் தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் மரியாதை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
முன்னதாக, பிரிசில்லா பாண்டியனும், கே.டி. ராஜேந்திர பாலாஜியும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, கே.டி. ராஜேந்திர பாலாஜி சாலையோரம் உள்ள கடையில் அமா்ந்து தேநீா் அருந்திவிட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
இலையையும், தாமரையையும் பிரிக்க முடியாது. இலை எங்கு இருக்கிறதோ அங்கு தாமரை இருக்கும். மத்தியில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் இருக்க வேண்டும். பிரிசில்லா பாண்டியன் வழக்குரைஞா், படித்தவா், அனைவரையும் மதிக்கக் கூடியவா். எனவே, அவா் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி.
ராஜபாளையத்தில் கடந்த இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து, மக்களை ஏமாற்றி வருபவா் மீண்டும் வெற்றி பெறக் கூடாது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.
இதில் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.