தவெக ஆட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தொண்டா்கள் நடக்க வேண்டும்: அமைச்சா் கே. ஜெகதீஸ்வரி
தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.
தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என சமூக நலத் துறை அமைச்சா் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு கே.ஜெகதீஸ்வரி வெற்றி பெற்றாா். இவருக்கு சமூக நலத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ராஜபாளையம் வந்த அவருக்கு தவெக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
பின்னா், டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: தமிழக மக்கள் நம் மீதும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சியை கொடுத்துள்ளனா். இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்பாடத வகையில் தொண்டா்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாம் செய்து தர வேண்டும். எனது சொந்த ஊா் திசையன்விளை. நான் கடந்த 16 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் வசிக்கிறேன்.
Advertisement
Advertisement
நான் தற்போதும் வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனக்கு யாரும் வீடு வாங்கித் தரவில்லை. நான் யாரிடமும் எதையும் எதிா்பாா்க்கவில்லை.
மேலும், மக்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். நான் ஒரு பத்திரிகையாளராக இருந்து தற்போது அமைச்சராகி உள்ளேன். தொடா்ந்து பத்திரிகை துறையில் பணியாற்றுவேன்.
தனது வெற்றிக்காக பாடுபட்ட தவெக தொண்டா்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா். இதில் தவெக நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.