இது புதுசு: செல்போனில் புத்தகம் படிக்கலாம்!
எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம், அவர்களது படைப்புகள் மக்களால் பாராட்டப்படும்போது மட்டுமே கிடைக்கிறது. ஆனால், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை புத்தகங்களாக வெளியிடுவதே சிரமம். தற்போது புத்தகங்கள் வெளியிட
எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம், அவர்களது படைப்புகள் மக்களால் பாராட்டப்படும்போது மட்டுமே கிடைக்கிறது. ஆனால், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை புத்தகங்களாக வெளியிடுவதே சிரமம். தற்போது புத்தகங்கள் வெளியிட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
பெரிய அளவில் வர்த்தக நோக்கமின்றித் தனது படைப்புகளை இணையதளத்தின் மூலம் கொண்டு சேர்ப்பதற்கான வழிகளும் தற்போது உள்ளன. இணையதளத்தில் வலைப்பூக்கள் எனும் பெயரில் தனக்கென ஓர் இடத்தை (ஆப்ர்ஞ்) ஏற்படுத்தி, அதில் விரும்பியதை எழுதும் பழக்கமும் தற்போது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வலைப்பூக்கள் தளங்கள் உள்ளன. இதில் 150 வரை மட்டுமே அதிக வரவேற்பைப் பெற்றவை. ஆனால், 6 கோடி தமிழர்களில், இணையதளத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் கொண்ட ஒரு சாராருக்கு மட்டுமே இது பயன்படுகிறது.
இன்று செல்போனைப் பயன்படுத்தாதவரே இருக்க முடியாது. செல்போனில் புத்தகம் படிக்க முடியும் என்றால் எவ்வளவு நல்லது? ஒவ்வொரு மனிதனையும் நடமாடும் நூலகமாக மாற்றும் மந்திரச் சொல்.
Advertisement
மத்திய ரக செல்போன்கள் அனைத்திலும் "ஜாவா' எனும் கணினி மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த "ஜாவா' வசதி கொண்ட பிரபல நிறுவனங்களின் செல்போன்களில், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் எழுத்துகள் செயல்படும் வகையிலான தொழில்நுட்பம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,330 திருக்குறள்களையும் அதிகாரம் வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு குறளுக்குமான விளக்கத்தோடு கொண்ட மொபைல் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர் வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்துக்குள் செயல்படும் "மொபைல் வேதா' நிறுவனத்தினர். மேலும், 1000 புத்தகங்களை 250 எம்பி அளவுக்கு உருவாக்கியுள்ளனர்.
இதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய, இந்நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் கே.ஆர்.கணேஷ்ராமைச் சந்தித்தோம். இனி அவர்...:
"தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், விஐடி பல்கலை. இடமளித்து, ரூ.6.5 லட்சம் வரை கடனளித்தது. செல்போன்களை பயனுள்ள பணிகளுக்கு மாற்ற வேண்டுமென்ற நோக்கில், நிறுவன இளைஞர்கள் கே.கதிரேசன், எஸ்.பரத்குமார், பி.டேவிட், ஆர்.சந்திரசேகரன், ஏ.அபாஸ், டி.சதீஷ், எம்.ஜெயபால், என்.கோபி, எஸ்.கலையரசி ஆகியோர் மேற்கொண்ட ஆராய்ச்சி தற்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளது.
திருக்குறளை அனைவருக்கும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து வருகிறோம். ஜாவா மொழி கொண்ட செல்போன்களில் தமிழ் எழுத்துகளை பயன்படுத்தச் செய்ததுதான் எங்களது வெற்றி. புத்தகத்தைத் திறந்தால் செல்போன் ஸ்கிரீன் முழுவதற்கும் தமிழ் எழுத்துகள் தெரியும். இதில் தேவைப்படும் அதிகாரத்தைத் தேர்வு செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
600 தமிழ் நூல்கள், 400 ஆங்கில நூல்கள், 10 ஒலி வடிவ நூல்கள், 50 பிரபலங்களின் தகவல்கள் என மொத்தம் 1000 புத்தகங்கள் கொண்ட குறுந்தகடுகள் (சிடி), மெமரிகார்டுகள் தயாரித்து ரூ.300க்கு விற்பனை செய்கிறோம். எங்களது ‘www.fublish.com’ எனும் இணையதளம் மூலமும் வழங்குகிறோம். இதை செல்போனில் பதிவிறக்கம் செய்து இயக்கத் தொடங்கியதும், அங்கிருந்து வரும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் எங்களது கணினியில் இருந்து பதிவு எண் அனுப்பப்படும். அதைப் பதிவு செய்தால் மட்டுமே புத்தகத்தைத் திறக்க முடியும்.
அதே சிடியிலிருந்து நகலெடுப்போர், அப்புத்தகத்தைத் திறக்க முடியாது. திறக்க முயற்சிக்கும்போது, "அது நகல்' என்பதற்கான குறுந்தகவல் கணினிக்குக் கிடைத்துவிடும். கணினி பதிவு எண்ணை அனுப்பாது. அதனால், நகலெடுக்கும் முயற்சி தோல்வியடையும் வகையில் மிகவும் பாதுகாப்பானதாக இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளோம்.
இணையதளத்திலிருந்து புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து செல் போன்கள் மூலம் வாசிக்கும் நடைமுறை ஏற்கெனவே உண்டு. ஆனால், அவை குறிப்பிட்ட பிடிஎப் பைல்களாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதும், வாசிப்பதும் மிகவும் சிரமமானது.
தற்போது உருவாக்கப்பட்ட புதிய நடைமுறையால், எளிதாகப் பக்கங்களைத் திறந்து படிக்கலாம். தேவைப்படும் பக்கத்துக்கு நேரடியாகச் செல்ல முடியும் என்பன போன்ற வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.
எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை மொபைல் புத்தகங்களாக மாற்றி, எங்களது நிறுவனம் மூலமும் விற்பனை செய்யலாம் அல்லது அவர்களாகவே விற்பனை செய்துகொள்ளலாம்.
தற்போது கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்களை செல்போன் புத்தகத்துக்கு மாற்றும் பணி நடைபெறுகிறது. விரைவில் கிரைம் நாவல்கள் செல்போன்களில் வலம் வரும்' என்றார் கணேஷ்ராம்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், புதிய பாதையை, பரிணாமத்தை நோக்கி புத்தகங்கள் அடியெடுத்து வைத்தாலும், அவற்றை வாசிக்கும் பழக்கம் மக்களிடம் ஏற்பட்டால்தான் இம்முயற்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கும்.