ஆறிப் போன காபி, தேநீர் போன்றவற்றை மீண்டும் சுட வைத்துக் குடிப்பது, சூடான நீரை பாலிதீன் கவர்களில் ஊற்றிக் குலுக்கிப் பாலுடன் கலப்பது, உலோகப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்குவது, ரப்பர், டயர், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொளுத்துவது, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வாழ்வது போன்றவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள், நவீன ஆராய்ச்சியாளர்கள். அதே போல புராதன ஆயுர்வேத நூல்களில் புற்றுநோய்க்கான காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனவா?
எஸ்.அனந்தராமன், சென்னை - 40.
அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் மட்டமான உணவுவகைகளைப் பட்டியலிடும்போது "உஷ்ணீ க்ருதம் புன:' என்று நடுவில் குறிப்பிடுகிறது. அதாவது எந்த ஓர் உணவுப் பண்டத்தையும் மறுபடியும் சூடு செய்வது, மட்டமான உணவாகும் என்று அதற்கு அர்த்தமாகும். உணவைச் சமைத்த ஒன்றரை மணி நேரத்திற்குள் அதன் சூடு சுமாரான நிலையில் இருக்கும்போதே, உண்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதோ?
உணவைச் சீரணிக்கச் செய்பவை ஆறு:
1. ஊஷ்மா - உடற்சூடு, 2. வாயு - வாதம், 3. க்லேதம் - பிசுபிசுப்பு - நீர்ப்பதம் - ஈரப்பசை, 4. ஸ்நேகம் - எண்ணெய்ப்பசை, 5. காலம் - நேரம், 6.ஸமயோகம் - சமத்தன்மையுடைய சேர்க்கை
உடற்சூடு உணவைச் சீரணிக்கச் செய்கிறது. சமானன் என்று வாயு பசித்தீயின் அருகிலிருந்து கொண்டு அதைத் தூண்டுகிறது. சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்புக் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ் நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. க்லேதம் எனும் பிசுபிசுப்பைத் தரும் க்லேதக கபம், உணவுக் கூட்டிற்கு ஈரப் பசையை அளித்து சீரண வேலையை எளிதாக்குகிறது. எண்ணெய்ப் பசை குடலில் மிருதுவான தன்மையை உண்டு பண்ணுகிறது. காலம் எனும் நேரமானது உணவை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. மேற்கூறிய உடற்சூடு முதலியவை சரியாக அமைதல் ஸமயோகமாகும். பழக்கமான நன்மை பயக்கும் உணவு, உடலைப் பேணுதல், உண்ணுதல், அசைவுகள், படுக்கை, மனத்தெளிவு இவை ஆறும் ஸமயோகத்திற்குக் காரணங்களாகும்.
நீங்கள் குறிப்பிடும் முதல் மூன்று காரணங்களால் மேற்குறிப்பிட்ட ஆறு விஷயங்களும் பாதிப்படைந்து அமுதமாக உடலுக்குச் சேர வேண்டிய உணவின் சத்தானது, விஷம்போல் உடலில் சேர்ந்து கொண்டிருப்பதாலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. மற்ற இரண்டும் புறக்காரணங்களானாலும், அவற்றின் உட்புற வரவு உடலுக்குக் கடும் தீங்கைத் தரும் புற்றுநோயை மேற்கூறிய உயர்ந்த செயல்பாடுகளைக் கெடுத்துவிடுவதாலேயேதான் தோற்றுவிக்கின்றன.
உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளின் சேர்க்கை (உதாரணம்: பாலுடன் கொள்ளு, பாலுடன் பலாப்பழம், பாலுடன் மீன், தயிரைச் சூடாக்கிச் சாப்பிடுதல்), வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு பகலில் படுத்துறங்குதல், வேலை ஏதும் செய்யாமல் சீட்டாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டே வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு மெல்லுதல், தங்கத்தைத் தவிர மட்டமான உலோகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை உடலில் அணிந்து கொள்ளுதல், குடல் சுத்தி முறைகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருத்தல், நோய்க்குத் தேவையற்ற மாத்திரைகளைப் பயன்படுத்துதல், நெற்கதிர்களைப் புழு பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற ரசாயனக் கலவை மருந்துகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல், உடல் உட்புறக் கசிவுகளை தோற்றுவிக்கும் மீன், வெல்லம், தயிர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவது, முன் உண்ட உணவு செரிக்காத நிலையிலேயே அடுத்த உணவை மனம்போன போக்கில் சாப்பிடுவது போன்ற சில காரணங்களும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
நிம்பா அமிருத பஞ்சதிக்த கஷாயம், திரிபலாதி சூரணம், கண்மத பஸ்பம், மூல காத்யாரிஷ்டம் போன்ற மருந்துகள் புற்றுநோய்க்கு, நோயாளியின் உடல்நிலைக்குத் தக்கவாறு அளிக்கப்படும் சில நல்ல ஆயுர்வேத மருந்துகளாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.