முகப்பு
தினமணி கதிர்

ஆலயம்: எளியவர்களின் பாதுகாவலர்!

உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களைப் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்து உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பரப்புவதற்காக அனுப்பினார். அப்படி நற்செய்தியைப் பறைசாற்றவும் நோயாளிகளைக் குணமாக்கவும் இயேசு அனுப்ப

Updated On : 20 செப்டம்பர் 2012, 8:16 pm IST
பகிர்:

உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களைப் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்து உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பரப்புவதற்காக அனுப்பினார். அப்படி நற்செய்தியைப் பறைசாற்றவும் நோயாளிகளைக் குணமாக்கவும் இயேசு அனுப்பிய 72 சீடர்களில் புனித மத்தியாசும் ஒருவர்.

  மத்தியாஸ் என்றால் "கடவுளின் கொடை' என்று பொருள். இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்துக்குப் பதிலாக முன்மொழியப்பட்ட பர்னபாஸ், மத்தியாஸ் ஆகிய இருவரில் மத்தியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவரானார்.

  மத்தியாஸ் முதலில் யூதேயா நாட்டிலும் பிறகு எத்தியோப்பியாவின் சில பகுதிகளிலும் நற்செய்தியைப் பறைசாற்றியதாகப் பாரம்பரியம் கூறுகிறது. அவர் எருசலேமில் யூதர்களால் கல்லால் எறியப்பட்டு, கழுத்து வெட்டப்பட்டு இறந்ததாக மற்றொரு பாரம்பரியக் கதை கூறுகிறது.

Advertisement

Advertisement

  11-ம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்க திருச்சபை இப்புனிதருக்கு வணக்கம் செலுத்தத் தொடங்கியது. இப்புனிதரின் திருவிழா ஆரம்பக்காலங்களில் பிப்ரவரி 24-ம் நாள் கொண்டாடப்பட்டுப் பிறகு 1969-ல் இருந்து மே 14-ம் நாளில் கொண்டாடப்படுகிறது.

  புனித மத்தியாஸýக்கு நமது சென்னை மாநகரிலேயே கே.கே. நகரில் அழகியதோர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அசோக் நகரில் காமராஜர் சாலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ஆலயத்தின் பலிபீடம் மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயப் பங்கில் 1800 குடும்பங்கள் உள்ளன.

  1960-களில் இன்றைய கே.கே.நகர் மாந்தோப்பு, வயல்வெளி, பொட்டல்காடு என்று பரந்திருந்தது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் இப்பகுதியில் அசோக்நகர் என்ற பெயரில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கியது. வழிபாட்டு இடம், பூங்கா என்று ஒதுக்கப்பட்ட பகுதியை, அன்றைய பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் மறைந்த அம்புரோஸின் முயற்சியால் வீட்டுவசதி வாரியத்திடமிருந்து விலைக்கு வாங்கி இங்கு ஆலயம் எழுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

  ஆலயம் புனித மத்தியாஸ் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஏறத்தாழ 150 குடும்பங்கள் இருந்தன. பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினர் இந்த இளம் பங்கின் அருட்பணிப் பொறுப்பை ஏற்றனர். முதலில் அருட்திரு மான்ஃபோர்ட் தனது பணியைத் துவக்கினார்.

  ஆலயப்பணி நடைபெற்ற காலங்களில் ஓர் இல்லத்தில்தான் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. முதலில் சிறியதொரு ஆலயம் கட்டப்பட்டது.

  1973-ம் ஆண்டு புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1974-ல் புனித மத்தியாஸ் ஆலயம் அருள்பொழிவு செய்யப்பட்டது.

  அருள்திரு சூசை அடிகளார் ஆலயப்பொறுப்பை ஏற்றபிறகு பங்கு பெருமளவில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. இப்போதைய மணிக்கூண்டும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஆலயமணியும் அவரது அரிய முயற்சியின் பயன்களே.

  இக்காலகட்டத்தின் பங்கின் வளர்ச்சி ஆயிரம் குடும்பங்களைத் தாண்டியது. பெருகிவந்த விசுவாசிகளின் தேவைக்காக ஆலயத்தை விரிவுபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1987-ல் அருள்திரு ஜோசப் அடிகளார் மூன்றே மாதங்களில் ஆலயத்தை விரிவுபடுத்தி சாதனை புரிந்தார்.

  இங்கு ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. 10-ம் நாள் தேர் பவனி மற்றும் சிறப்புத் திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த ஆண்டும் அண்மையில்தான் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது.

  தச்சர்கள், தையல்காரர்கள், போதைக்கு அடிமையானவர்கள் அம்மைநோயால் அவதிப்படுபவர்களுக்கு புனித மத்தியாஸ் தனது அருட்கரத்தை நீட்டி இறைவனிடம் வேண்டி ஆசீர்வாதங்களை நிறைவாகப் பெற்றுத்தருவார் என்பது இப்பங்கு மக்களின்

 நம்பிக்கை.                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.