ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!
என் மகளுக்கு வயது 23. சிறுவயதிலிருந்தே சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வருகிறாள். அவள் குணம் பெற உணவும் மருந்தும் என்ன சாப்பிடலாம்? தி.சங்கரநாராயணன், மணலி புதுநகர். மனித உடலில் சில மாறுபாடுகள் தானாக
என் மகளுக்கு வயது 23. சிறுவயதிலிருந்தே சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வருகிறாள். அவள் குணம் பெற உணவும் மருந்தும் என்ன சாப்பிடலாம்?
மனித உடலில் சில மாறுபாடுகள் தானாகவே நடக்கக் கூடியவை. வேறு சில நடப்பதற்குச் சக்தி தேவை. சக்தி தேவைப்பட்டாலும் படாவிட்டாலும், ஏறக்குறைய எல்லா மாறுபாடுகளும் உடம்பில் ஒழுங்காக நடைபெற, கிரியா ஊக்கி (என்ûஸம்) தேவைப்படுகிறது. இந்த கிரியா ஊக்கி, உடம்பில் தயாராகும் ஒரு புரதப் பொருள். இது மாறுபாடுகளைத் துரிதமான முறையில் நடத்த உதவுகிறது. வாழைப்பழத்தை நெருப்பிலிட்டால் அது மாறுபாடு அடைய மிகுந்த நேரமாகும். ஆனால் அதே வாழைப்பழம் உடம்பிலே விரைவிலேயே மாறுபாடு அடைகிறது. இதற்குக் காரணம் கிரியா ஊக்கிகள்தான். ஏதாவது ஒரு கிரியா ஊக்கி குறைந்தால் கூட தீராத நோய் ஏற்படலாம்.
ஒரு குடும்பத்தில் தந்தையிடமோ, தாயிடமோ இந்தக் கிரியா ஊக்கி இல்லாமல் இருந்தாலோ, குறைவான அளவில் இருந்தாலோ அல்லது தேவையற்ற இரசாயன மாறுபாட்டைத் துரிதப்படுத்துவதாக இருந்தாலோ, அதனால் பெற்றோர்கள் அனுபவிக்கும் நோய், சில குழந்தைகளுக்கும் பிறவியிலேயே ஏற்படலாம். இம்மாதிரி நோய்களுக்குப் பிறவியிலேயே ஏற்படும் இரசாயன மாறுபாடுகளின் தவறுகள் என்று பெயராகும். இவற்றிற்கு அணு சம்பந்தப்பட்ட நோய்கள் என்றும் பெயர் உண்டு. இந்த நோய்களினால் உடலில் ஏற்படும் வழக்கமான இரசாயன மாறுபாடுகளில் தடைகள் ஏற்பட்டுத் தேவையற்ற பொருட் களும், விஷப் பொருட்களும் உடலில் சேரலாம்.
Advertisement
உங்கள் மகளுக்கு சிறுவயது முதலே சிறுநீரகங்களில் வடிகட்டப்பட்டபின் மறுபடி சில பொருட்கள் கிரியா ஊக்கிக் குறைவால் இரத்தத்தில் உறிஞ்சப்படாமல் படிகங்கள் ஏற்பட்டு கற்களாக உருவாகியிருக்கலாம். அவை அகற்றப்பட்டாலும் இந்த கிரியா ஊக்கிக் குறைபாடு நீங்காமல் இருப்பதால் மறுபடியும் கற்கள் உருவாகியிருக்கலாம்.
உடலில் உள்ள புரதப் பொருட்கள், கிரியா ஊக்கி உட்பட உடம்பில் எங்கும் நிறைந்துள்ள சர்வ வல்லமையும் வாய்ந்த டி.என்.ஏ. என்னும் பொருளின் கண்காணிப்பில் உள்ளன. இந்த டி.என்.ஏ. எனப்படும் ஜீன்களின் மூலமாகத்தான் புரதப் பொருட்களின் உற்பத்தியின் ஆரம்பம் உள்ளது. ஜீனுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடலிலுள்ள புரதங்களும், கிரியா ஊக்கியும் விரும்பத்தகாத வகையில் மாறுபாடு அடைந்து நோய்கள் ஏற்படும். இது வம்ச பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் பாரம்பரிய இயல்பைச் சேர்ந்த நோய்.
மேற்கூறிய காரணங்களால் உங்கள் மகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்மை, எடைக்குறைவு போன்ற உபாதைகள் தோன்றியிருக்கலாம். "ஸம்ஸ்பந்தனம்' எனும் துடிப்பு, வாயுவின் செயலால் உடல் முழுவதும் நடைபெறுகிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக உடலெங்கும் கொண்டு செல்வது, மலம், சிறுநீர் ஆகியவற்றின் தேக்கத்தை ஏற்படாதவாறு அவற்றை வெளியே தள்ளுவது, உணவுப் பையில் அசைவுகளை உருவாக்கி, உண்ட உணவைச் செரிக்கச் செய்து, அவ்விடத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அமிலச் சுரப்பை ஏற்படுத்தி பசியைத் தூண்டுவது, இதயத்தின் உள்ளே தங்கியிருந்து அதன் விரிவு மற்றும் சுருங்குதல்ó ஆகிய செயல்களைச் சீராகச் செய்வது, உட்புறக் குழாய்களில் படிகங்கள் எங்கும் படியாதவாறு, எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி அப்படிகங்களை வியர்வை, சளி, ஜலதோஷங்களின் மூலம் வெளியேற்றுவது போன்ற சிறப்பான செயல்களைச் செய்கிறது. இந்த ஸம்ஸ்பந்தனம் எனும் செயலை யார் சிறப்பாகப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் அவ்வளவு எளிதாக எந்த நோய்க்கும் ஆட்படுவதில்லை. அதற்கு வேண்டிய முயற்சிகளை உங்கள் மகள் விஷயத்தில் நீங்கள் செய்ய வேண்டும்.
செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வெதுவெதுப்பாக வயிறு, முதுகு,தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து நன்றாக ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளித்தல், அன்றைய உணவில் சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர் ,கேரட் உசிலி என்ற வகையில் சாப்பிடுதல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல், வீட்டிலுள்ள வேலைகளைத் தானாகவே எடுத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுதல் போன்றவற்றைச் செய்தல் நலம்.
பிருகத்யாதி கஷாயம், வீரதராதி கஷாயம், கண்மத பஸ்மம், பிரவாள பஸ்மம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் மகள் இவற்றில் எது சிறந்ததோ அதைப் பயன்படுத்திக் குணம் பெறலாம்.
(தொடரும்)