முகப்பு
தினமணி கதிர்

பயிற்சி: மனவளர்ச்சி குன்றியோருக்கு தொழில் பயிற்சி!

ஒவ்வொருவரும் தன் குழந்தைகள் சிறந்த கல்வியாளராகவோ அல்லது தொழிலதிபராக வரவேண்டும் என எண்ணுவர். ஆனால், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பெற்றவர்கள், அவர்களைப் பற்றி எந்தக் கனவுகளையும் வைத்துக் கொள்வதில்லை

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:12 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:15 PM

ஒவ்வொருவரும் தன் குழந்தைகள் சிறந்த கல்வியாளராகவோ அல்லது தொழிலதிபராக வரவேண்டும் என எண்ணுவர். ஆனால், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பெற்றவர்கள், அவர்களைப் பற்றி எந்தக் கனவுகளையும் வைத்துக் கொள்வதில்லை. மேலும், அவர்களுக்கு உரிய கல்வி அளிக்க முயற்சிப்பதும் இல்லை.

இந்நிலையில், மனவளர்ச்சி குன்றியவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்களுக்குத் தொழில் பயிற்சி அளித்து, வேலையும் பெற்றுக் கொடுத்து, அவர்களை ஒரு முழு மனிதனாக்குவது ஆச்சரியமான விஷயம்.

இவர்களுக்கு 6 வயது முதல் சிறப்புக் கல்வியுடன் தொழிற் பயிற்சியும் அளித்து, ஓராண்டு ஆலையிலும் பயிற்சி அளித்து, 16 வயதில் அவர்களுக்கு வேலையும் வாங்கித் தந்து, மனவளர்ச்சி குன்றியோர் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி நிர்வாகத்தினர். இது குறித்து, இப் பள்ளித் தலைமை ஆசிரியர் எம். தயாளன் பர்னபாஸிடம் கேட்டோம்.

Advertisement

இந்தப் பள்ளி எப்போது துவங்கப்பட்டது?

1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி சி.எஸ்.ஐ. மதுரை - முகவை திருமண்டலத்தின் மூலம் துவக்கப்பட்டது.

17 ஏக்கர் நிலப் பரப்பளவில் எங்கள் பள்ளியுடன், காது கேளாதோர் பள்ளியும் தனித் தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில் 13 பேர் சேர்க்கப்பட்டனர். தற்போது, 74 மாணவர்களும் 34 மாணவிகளும் உள்ளனர்.

இவர்களுக்கு இங்கு, தனித் தனியே விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா?

மாதம் பள்ளிக் கட்டணமாக ரூ. 30-ம், விடுதிக் கட்டணமாக ரூ. 30-ம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இந்தக் கட்டணமும், பெற்றோர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வசூலிக்கப்படுகிறது. பள்ளிச் சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பள்ளியின் பாடத் திட்டங்கள் குறித்து..?

இது சிறப்பு பள்ளி. எனவே, இங்கு சிறப்புக் கல்விக்கான வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதற்கு, மத்திய அரசுப் பாடத் திட்டங்களைத் தமிழில் வடிவமைத்துள்ளோம்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர் என்ற நிலை இல்லை. முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்.

ஆசிரியர்களும் மாணவர்களின் திறமைக்கேற்ப கல்வி கற்பிப்பர். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அவர்களுக்கு ஆரம்பத் தொழிற் கல்வியும் அளித்து வருகிறோம்.

எது மாதிரியான தொழிற் பயிற்சி அளித்து வருகிறீர்கள்?

நோட்டுப் புத்தகம் தயாரிப்பது, மினி ஆப்செட் இயந்திரத்தை இயக்குவது, தாள் பிரிப்பது, தாள் எண்ணுவது, பைண்டிங் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். மேலும், ஓராண்டு இம்மாதிரியான பயிற்சியை வெளியிலும் அளிக்கிறோம். அது போல, பட்டாசு ஆலைகளுக்கு தேவையான குழாய்கள் தயாரிக்கும் பயிற்சியையும் அளிக்கிறோம். கடுமையான வேலைகள் குறித்த பயிற்சிகளை அளிப்பதில்லை.

இதுவரை எத்தனை பேர் பயிற்சி பெற்றுள்ளனர்?

12 பேர் பயிற்சிபெற்று தற்போது, வெளியில் உள்ள ஆலைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். இதில் மூன்று பேர் பெண்கள். இவர்களுக்கு தங்கும் விடுதி வசதி செய்துள்ளோம். இங்கு தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வங்கிகளில் சுமார் ரூ. 30 ஆயிரம் வரை சேமித்து வைத்துள்ளனர். எனவே, இவர்கள் குறித்த சமூகப் பார்வை மாறிவருகிறது. வீட்டிலும் இவர்களுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேவையானவர்களுக்கு பிஸியோதெரபி மூலம் உடல் நிலையையும் கவனித்து வருகிறோம். ஒரு பெண் உள்பட 7 பேர் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

பெற்றோர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு மிகுந்த நுண்ணறிவு உள்ளது. கோயில் திருவிழா, திருமண விழா உள்ளிட்டவைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லவேண்டும். மொத்தத்தில் அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் பள்ளியின் சிறப்பு என்ன?

மனவளர்ச்சிக் குன்றியவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கிறோம்.

மனப் பயிற்சி, உடல் பயிற்சி ஆகியன அளிக்கிறோம். இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில், மாநில அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் தடகளப் போட்டியில், எங்கள் பள்ளி மாணவர்கள் 12 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் எங்களின் முன்னாள் மாணவர்களுக்கு தனியே விடுதி கட்டவேண்டும். வீடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகனம் ஒன்று வாங்க வேண்டும். தீவிர மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு தனி விடுதி கட்ட வேண்டும்.

இப்பள்ளிக்கு அரசு உதவுகிறதா?

நன்கொடையாளர்களிடம் வசூல் செய்து கட்டடம் கட்டுகிறோம். அரசு ஏதாவது எங்களுக்கு செய்யவேண்டும் என்று நினைத்தால், இங்கு பணிபுரியம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கினாலே போதும்.

தற்போது பணிபுரிந்துவரும் 10 ஆசிரியர்களில் இரு ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு சம்பளம் வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.