சாதனை: சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் விவசாயி மகன்!
எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் உள்ள நகரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஒரு துறையில் சாதிக்கிறார் என்றால், அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள ம
எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் உள்ள நகரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஒரு துறையில் சாதிக்கிறார் என்றால், அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள மேல நாகை கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜா ஒரு விவசாயியின் மகன். அவர் மாநில அளவிலான மற்றும் சர்வதேச வலு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
வலு தூக் குத லில் ஆர் வம் வந் தது எப் படி?
விளை யாட்டில் சாதிக்க வேண்டுமென்ற ஆர்வம் சிறு வயதிலிருந்தே இருந்தது. எனது உறவினர்கள் பலர் பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, அதனாலேயே, அந்த துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்று விரும்பியதே இதில் ஆர்வம் ஏற்படக் காரணம்.
Advertisement
எந்த வயதில் பயிற்சியைத் தொடங்கினீர்கள்?
15 வயது முதல் இதற்கான பயிற்சியைத் தொடங்கினேன். 17 வயதுக்குப் பின்னர்தான் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
யாருடைய வழிகாட்டுதல் உதவியது?
எனது உற வினர் சக்திவேல்தான் எனக்கு முதலில் கற்றுக் கொடுத்தார். அவருக்கும் முறையான பயிற்சி இல்லை என்றாலும், ஒவ்வொரு தவறையும் அனுபவமாகக் கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் அது நிகழாவண்ணம் சரி செய்து கொண்டேன்.
முதன் முதலில் எந்தப் போட்டியில் பங்கேற்றீர்கள்?
மன்னார்குடியில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டிதான் எனது முதல் போட்டி. இதில் பங்கேற்றாலும், பரிசு வெல்ல இயலவில்லை. அடுத்து அதே ஆண்டில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அளவில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன்.
பின்னர், 2004-ம் ஆண்டில் 7 மாவட்டங்களுக்கிடையே மன்னார்குடியில் நடைபெற்ற போட்டியில் இரும்பு மனிதன் பட்டம் வென்றேன். 2005-ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் ஸ்குவாட் பிரிவில் 220 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தேன். இதைத் தொடர்ந்து, திருச்செங்கோடு மற்றும் தஞ்சை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன்.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம்?
2007-ம் ஆண்டில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச வலு தூக்கும் போட்டியில் பங்கேற்றேன். போட்டி நடைபெற்ற நேரத்தில் அங்கு நிலவிய குளிர் எனது உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாததால், இப் போட்டியில் சரியான முறையில் என்னால் சாதிக்க முடியவில்லை. ஆனால், இங்குதான் எனக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன.
அதன்பின்னர் 2009-ம் ஆண்டு தில்லியில் சர்வதேச சீனியர் வலு தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் 60 கிலோ உடல் எடைப் பிரிவில் ஸ்குவாட் மற்றும் அனைத்துப் பிரிவுகளிலும் மொத்தம் 640 கிலோ எடை தூக்கி இருவர் மூன்றாமிடம் பெற்றோம். உடல் எடை அடிப்படையில் எனக்கு 4 -வது இடம் கிடைத்தது. இதில் ஸ்குவாட் பிரிவில் 260 கிலோ எடை தூக்கிய எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் வலு தூக்கும் போட்டியில் 60 கிலோ உடல் எடைப் பிரிவில் ஸ்குவாட் பிரிவில் 275 கிலோ எடையைத் தூக்கினேன். இது தேசிய அளவிலான சாதனையாகும். அந்தப் போட்டியில் மொத்தமாக 672 கிலோ எடை தூக்கினேன்.
முறையான பயிற்சியோ, உணவோ அதுவரை எடுத்துக் கொள்ளாத எனக்கு, 2009-ம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்ற போது, அங்கு வந்திருந்த வலு தூக்கும் வீரர் தென்னக ரயில்வேயில் பணியாற்றும் நாகராஜன் எனக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து நான் அவரிடம் பல்வேறு சந்தேகங்களையும் இன்றும் தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு கேட்டு அதன்படி பயிற்சி செய்து வருகிறேன்.
அடுத்து என்ன?
வரும் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச சீனியர் வலு தூக்கும் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளேன். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். தற்போது நான் பணியாற்றி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் பயணச் செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், நான் போட்டிகளுக்குத் தயாராவதற்கு தேவையான பயிற்சி எடுத்துக் கொள்வதற்கும், போட்டியில் பயன்படுத்தும் உடைகள் வாங்குவதற்கும்தான் மிகுந்த சிரமமாக உள்ளது.
தற்போது மன்னார்குடியில் உள்ள ஒரு சிறிய ஜிம்மில் தான் பயிற்சி செய்து வருகிறேன். உரிய பயிற்றுநர் மற்றும் சரியான உபகரணங்கள் இருந்தால், இன்னும் அதிக அளவில் சிறந்த சாதனைகளைப் புரிந்து நம் நாட்டுக்கு பெருமையைத் தேடித் தர முடியும்.