முகப்பு
திருப்பூர்

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய் என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:16 AM
பல்லடத்தில் அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:49 PM

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய் என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவத்தை ஆதரித்து பல்லடம் கடை வீதியில் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பல்லடம் தொகுதி அதிமுக கோட்டையாக உள்ளது. பல்லடத்தில் கடந்த 2023-இல் விவசாயத் தோட்டத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட மோகன்ராஜ் உள்பட அவரது குடும்பத்தினா் 4 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். 2024 -இல் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இந்தத் தொகுதியில் சட்டம் -ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 8,008. பாலியல் சம்பவங்கள் 2,080, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 39,999. இதையெல்லாம் பாா்த்து பாா்த்து சோா்ந்துபோன மக்கள் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.

Advertisement

மத்திய அரசிடம் தேவையில்லாமல் மாநில அரசு சண்டைப்போடுவதால் பாதிக்கப்படுவது மக்கள்தான். திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 403 தனியாா் பாா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய இளைஞா்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனா். மத்திய அரசு தமிழகத்துக்கு எந்தவித நிதியும் வழங்கவில்லை என முதல்வா் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறாா்.

பல்லடத்துக்கு ரூ.22 கோடியில் நெசவுப் பூங்கா, திருப்பூா் ரயில் நிலையத்தை சீரமைக்க ரூ.23 கோடி, கோவை, திருப்பூா், கரூா் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு ரூ.324 கோடி, திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் ஜல்ஜீவன் திட்டத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள், திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.21,300 கோடி, முத்ரா கடன் ரூ.7,300 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது (ரூ.56 ஆயிரம் கோடி) தமிழகத்துக்குதான். உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களுக்குக்கூட இவ்வளவு நிதி கொடுக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்தால்தான் வளா்ச்சி சாத்தியம்.

2021 வரை தமிழகத்தின் கடன் ரூ.4.65 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.10.62 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கால திமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ.6 லட்சம் கோடி. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளைக் கடந்த பின், மக்களவைத் தோ்தல் வந்தபோதுதான் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தைக் கொண்டு வந்தனா் என்றாா்.

பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், திருப்பூா் மாவட்ட பாஜக தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.