தினமணி கதிர்

சாதனை: காணாத கண்கள்; கனிவான சேவை!

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் தரமான சேவையிலேயே அடங்கியுள்ளது. ÷பெரும்பாலான வங்கி போன்ற அலுவலகங்களில் அதற்கென நியமிக்கப்பட்ட தனி அலுவலர் வாடிக்கையாளர்களுக்கு இன்முகத

என். தமிழ்ச்செல்வன்

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் தரமான சேவையிலேயே அடங்கியுள்ளது.

÷பெரும்பாலான வங்கி போன்ற அலுவலகங்களில் அதற்கென நியமிக்கப்பட்ட தனி அலுவலர் வாடிக்கையாளர்களுக்கு இன்முகத்துடன் உதவி செய்வார். ஆனால் அரசு வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவை எவ்வாறு உள்ளது என்பதை அங்கு சென்ற அனைவருமே அறிவர். ஒருவித அச்சத்துடனோ அல்லது ஏதாவது கூறி விடுவாரோ என்ற தயக்கத்துடனோதான் எந்த உதவியையும் அங்கே இருப்பவரிடம் கேட்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. ஆனால் எல்லா அரசு வங்கிகளிலும் இப்படித்தான் உள்ளது என்று சொல்லிவிட முடியாது.

÷அந்த வகையில் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளாமல், வாடிக்கையாளரின் முகத்தையும் பார்க்காமல் இன்முகத்துடன் சேவை செய்கிறார் ஒரு பொதுத்துறை வங்கி அலுவலர். திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட அவர் ஒரு பார்வையற்றவர். வாடிக்கையாளர்கள் முகம் பார்க்காமல் இன்முகத்துடன் அவர் உதவி செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

÷திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, மூலனூர் அருகே பட்டத்தம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, நாச்சம்மாள் தம்பதியின் மூத்த மகன் மாரிமுத்து. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிறவியிலேயே பார்வையற்றவர். உடல் அங்கத்தில் உள்ள குறைகள் வளர்ச்சிக்குத் தடையில்லை என்பதை உணர்ந்த இவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் செய்த உதவியினால் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். நாடு தழுவிய அளவில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கடந்த 2010ல் நடத்தப்பட்ட பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்ற அவர் டிசம்பர் மாதம் முதல் திருப்பூரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிரெடிட் கார்டு பெறுதல், புதிய கணக்கு துவங்குதல், கடன் பெறுதல், நடமாடும் வங்கி சேவை, எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இவர் கனிவுடன் பதிலளித்து வருகிறார். இப்பணிக்காக பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் சிறப்பு ஒலி வசதியுடன் கூடிய மென்பொருளுடன் கணினி நிறுவப்பட்டுள்ளது. அக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள ஹெட்ஃபோனிலிருந்து தகவல்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார்.

முகம் பார்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ள இவரது சேவை வங்கிக்கு வரும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்து மாரிமுத்து கூறுகையில், ""கடந்த 2010 இறுதியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடத்தப்பட்ட பணியாளர் தேர்வின் மூலம் நாடு முழுவதும் 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் பார்வையற்ற 6 பேர் தேர்வு செய்யப்பட்டதில் நானும் ஒருவன். கண்பார்வையில்லை என்ற பரிதாபத்துக்காக இவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. முறையாக அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பிறகே இப்பணி கிடைத்தது.

நண்பர்கள் உதவியுடன் முதுகலை பட்டம் பெற்ற நான் இப்பணியின் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் நண்பனாக செயல்படுவதை பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.

வங்கிப் பணிக்காக யாருடைய துணையும் இல்லாமல் தினமும் மூலனூரிலிருந்து திருப்பூருக்கு பஸ்ஸில் வந்து செல்லும் இவர் சாதிக்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வழிகாட்டி.

படம் : எஸ்.ராஜு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT