எனக்கு சர்க்கரை நோய் பல வருடங்களாக இருக்கிறது. தினமும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வயிறு புண்ணாகிவிட்டது. தற்சமயம் சர்க்கரை உபாதை அதிகமாகி உடம்பெங்கும் அரிக்க ஆரம்பித்துவிட்டது. உடல் எடையும் குறைந்துவிட்டது. எலும்புகள் வலுவிழந்துவிட்டன. இவை சரியாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
லதா மஹேஸ்வரி, மதுரை.
நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், மழமழப்பு, கொழகொழப்பு, நிலையானது எனும் குணங்களின் ஆதிக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட கபம் எனும் தோஷமானது, ஆஸ்யா ஸýகம் - அதிகநேரம் சுகமாக ஓரே நிலையில் அமர்ந்திருப்பது, ஸ்வப்னஸýகம் - குஷன் படுக்கையில் அதிக நேரம் படுத்திருப்பது; ததி - தயிர் அதிக அளவில் இனிப்பாய்ச் சேர்ப்பது; க்ராம்ய ஆனூபஒüதக ரஸம் - ஆடு, கோழி, சதுப்பு நிலங்கள் நீர் நிலைகள் இவற்றிலுள்ளவற்றின் மாமிச உணவு; குடவைக்ருதம் - வெல்லம் சர்க்கரையாலானவை இவற்றின் அதிக உபயோகம் போன்றவற்றால் சீற்றமுற்று சர்க்கரை உபாதைக்குக் காரணமாய் அமைகின்றன.
நெய்ப்புக்கு எதிரான வறட்சி, குளிர்ச்சிக்கு எதிரான சூடு, கனத்திற்கு எதிரான லேசு, மந்தத்திற்கு எதிரான கூர்மை, மழமழப்புக்கு எதிரான முறமுறப்பு, கொழகொழப்புக்கு எதிரான சுரசுரப்பு ஆகிய குணங்களை மருந்தின் மூலமாகவும், வேகமான நடைப் பயிற்சி, இனிப்புச் சுவையை உணவில் நிறுத்துதல், கொடிக்காய்களை அதிகம் சேர்த்தல், பகல் தூக்கம் தவிர்த்தல்போன்றவற்றின் மூலமாக நாம் பெரும் முயற்சி செய்யும்போது சர்க்கரையின் அளவு உடலில் குறைகிறது. ஆனால் இந்தக் குணங்களின் ஆதிக்க தோஷங்களாகிய வாத - பித்தங்கள் கூடுவதை நம்மால் கணிக்க முடிவதில்லை. இந்த இருதோஷங்களின் வளர்ச்சியால் உடல் எடை குறைதல், எலும்புகளின் வலு குறைதல், வயிற்றில் புண் ஏற்படுதல், எந்நேரமும் உடல் சோர்வாகவே இருத்தல், ஒருவிதமான மயக்கநிலை, சிந்தனைச் சோர்வு, குடலில் வாயு அதிகமாகி மலச்சிக்கல் ஏற்படுதல், சிறுநீர் தேன் போன்ற நிறத்தில் வெளியேறுதல், உடல் அசதி போன்ற பல உபாதைகளால் பாதிக்கப்படுகிறோம்.
வாத பித்தங்களின் வளர்ச்சியால் உங்கள் உடல் பல உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தோஷங்களைக் கீழடக்கி, கபம் வளராமல் பார்த்துக் கொள்வதன் மூலம், வாத - பித்த - கப தோஷங்களின் சமமான நிலையைப் பெற்று ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறலாம்.
அந்த வகையில்- கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் ஒன்றை அடையாகவோ, வேக வைத்து மோர் கலந்தோ வெறும் வயிற்றில் சாப்பிடவும். கேழ்வரகுக் களியும் சாப்பிடலாம். மதியம் சூடான புழுங்கலரிசிச் சாதம், பயத்தம் பருப்பு தூக்கலாகவும், துவரம் பருப்பு குறைவாகவும், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த தண்ணீரைக் கலந்து ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய தான் வந்திரம் கிருதத்தை சுமார் 10 மி.லி. சேர்த்து வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். குடல் வாயுவையும், பித்தத்தையும் மட்டுப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவைக் கூட்டும் இந்த ஆயுர்வேத மருந்தின் வேறொரு விசேஷ குணம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதுமாகும்.
இதனைத் தொடர்ந்து உபயோகித்தால், கணையம் நல்ல முறையில் இயங்கித் தகுந்த அளவு இன்சுலினும் சுரக்கத் தொடங்கும். அதன் பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்த ரஸம் அல்லது தக்காளி ரஸம் சாதம் சாப்பிடவும். பாகற்காய் பிட்லை, வாழைப்பூ வடைகறி என்று ஏதேனும் ஒன்றைப் பொரியலாகச் சாப்பிடலாம். நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோர்ச்சாதம், நெல்லிக்காய் ஊறுகாயுடன் அதன் பிறகு சாப்பிடவும். சிறிதுநேரம் அரசியைப் போல அமர்ந்து, பிறகு நூறடி நடக்கவும். நல்ல நீதிக் கதைகளைப் பிறர் சொல்லிக் கேட்டோ, புத்தகங்களிலிருந்து படித்தோ மதியப் பொழுதை இனிதாகக் கழிக்கவும்.
மாலையில் ஒரு கிளாஸ் சூடான பாலுடன் ஹார்லிக்ஸ் லைட் அல்லது டி புரோடீன் கலந்து சாப்பிடவும். நெய் - பால் போன்றவை வாத பித்த தோஷத்தை நன்கு அடக்கக் கூடியவை. உடலுக்குப் புஷ்டியும் தெம்பும் தருபவை. உங்களுடைய உடல் நிலைக்கு மிகவும் அவசியமானவை. வாதுமைப் பருப்பு 2-4 இரவு 7 மணிக்குச் சாப்பிடவும். சுமார் எட்டு மணிக்கு இரவில் கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன், பச்சைப் பயறு வேக வைத்து, சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கப்பட்ட கூட்டைச் சேர்த்துச் சாப்பிடவும்.
இரவில் படுக்கும் முன் சிலாசத்து எனப்படும் கண்மத பஸ்மத்தை ஒரு கேப்ஸ்யூல் சாப்பிடவும். வாரம் இருமுறை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நல்லெண்ணெயை உடலெங்கும் வெதுவெதுப்பாகத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். இவற்றின் மூலம் நீங்கள் நல்ல உடல் திடத்தைப் பெற்றிடலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.