முகப்பு
தினமணி கதிர்

சோக அரசி மீனாகுமாரி

இந்தி திரையுலகில் "குயின் ஆஃப் டிராஜிடி' என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதைய

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:33 PM
பகிர்:

இந்தி திரையுலகில் "குயின் ஆஃப் டிராஜிடி' என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும்.

வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரான இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்தபோது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன் இக்பால் பேகம் என்ற பெயரில் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறினார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும்பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ அருகில் குடியிருந்ததால் இவர்களது இரண்டாவது சிறிய பெண் குழந்தை மஹாஜாபீன் ஸ்டுடியோ அருகில் விளையாட செல்வதுண்டு. எதிர்பார்த்தபடி இசைத் துறையில் வாய்ப்பு கிடைக்காததால் குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாமல் அலி பக்ஸ் தவித்தார். சிறுவயதிலேயே தனது மூன்று மகள்களையும் சினிமாவில் நடிக்கவைக்க முயற்சித்தார். ஆறுவயது மகள் மஹாஜாபீன் பானு, டைரக்டர் விஜய் பட் கண்களில் பட, "லெதர் பேஸ்' (1939) என்ற படத்தில் நடிக்க வைத்தார்.

பேபி மீனா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பின்னர் காதலும் இசையும் கலந்த "பைஜு பாவ்ரா' (1952) படத்தில் மீனா குமாரி என்ற பெயரில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே அவருடைய நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்தியது. பின்னர் ஹோமிவாடியாவின் "அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1952) ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றார். புராணம், சரித்திரம் போன்ற படங்களில் பின்னர் சமூகப் படங்களில் நடித்தபோது சோக அரசியாக மாறியது ஆச்சரியமான விஷயம்தான்! அவரது தாய் பெங்காலி என்பதால் இயற்கையான மென்மையான முகத் தோற்றமும் இனிமையான குரலும் அவருக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்தன.

ஐம்பதுகளின் துவக்கத்திலேயே மீனாகுமாரி, தன் வாழ்க்கையில் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. பைஜு பாவ்ராவில் இணை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். படம் வெற்றி பெற்றது. பெங்காலி படத் தயாரிப்பாளர் பிமல் ராய் முதன் முதலாக மும்பை திரையுலகில் காலடி வைத்தபோது, வங்க மொழியில் பிரபலமான "பைஜு பாவ்ராûஸ' தான் இந்தியில் இயக்கி தயாரித்தார். அடுத்து அவர் தயாரித்து இயக்கிய பரினிதா (1953) மீனாகுமாரியை மேலும் உயரத்திற்கு கொண்டுசென்றது. இந்த இருபடங்களுமே அடுத்தடுத்து இரண்டாண்டுகள் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது.

இவரது அடுத்த படமான ஜியா சர்ஹாடியின் "புட்பாத்' (1953) வர்த்தகரீதியில் தோல்வி கண்டது. இவரைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் நடிகை என்ற அந்தஸ்த்தை உயர்த்தவே செய்தது. முதல் இரு படங்களின் வெற்றியால் இவரது தந்தை அலிபக்ஸ் அருமையான சூழ்நிலையில் வசதியான சிறு பங்களா ஒன்றை மெக்பூப் ஸ்டுடியோ அருகில் வாங்கினார்.

அதேநேரத்தில் இவரது வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. "மகால்' பட வெற்றியைத் தொடர்ந்து இந்தித் திரையுலகில் பிரபலமாக விளங்கிய கதாசிரியரும் டைரக்டருமான கமல் அம்ரோஹியை மீனாகுமாரி சந்திக்க நேர்ந்தது. 18 வயதான மீனாகுமாரியைவிட கமல் அம்ரோஹி 15 வயது மூத்தவர். ஏற்கெனவே திருமணமானவர். இருவருக்குமிடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும் இரண்டாண்டுகள் தங்கள் திருமணத்தை இருவருமே ரகசியமாக வைக்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் மீனாகுமாரியின் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். குடும்பப் பொறுப்பை இவரது தந்தை ஏற்க வேண்டியதாயிற்று. அதேநேரத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மீனாகுமாரி கூறியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கெனவே திருமணமானதை சொல்லியதோடு குடும்பத்திற்கு தேவையான பணஉதவியை நடிப்பதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் தொடர்ந்து அளிப்பதாகவும் உறுதியளித்தார். அந்த நேரத்தில் மீனாகுமாரியும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார்.

அவரது திருமண ரகசியமும் வெளியாயிற்று!

திலீப் குமாருடன் "ஆசாத்' (1955), புதுமுகமாக அறிமுகமான சுனில் தத்துடன் "ஏக் கி ராஸ்தா' (1956), ராஜ்கபூருடன் "சாரதா' (1957) போன்ற படங்கள்  மீனாகுமாரியின் திறமையை வெளிப்படுத்தின. வழக்கமான நடிப்புடன் சற்று நகைச்சுவையையும் கலந்து நடித்ததால் புதிய பரிமாணத்தைத் தொட முடிந்தது. சாதாரண கதாபாத்திரங்களில் நடித்துவந்தவருக்கு திலீப்குமாருடன் நடித்த "கோஹினூர்' (1960) சோக பாத்திரத்திலும் சோபிக்க முடியுமென்பதை நிரூபித்தது. "சோட்டி பஹூ', "அப்ரர் அல்லி' குருதத்தின் "சாஹேப் பீபீ அவுர் குலாம்' "ஸ்லேவே' ஆகிய படங்களில் மீனாகுமாரியின் வித்தியாசமான நடிப்பை காணமுடிந்தது. அதேநேரத்தில் "சோட்டி பஹூ' படத்தின் கதாபாத்திரம் போலவே அவரது வாழ்க்கையும் திசைமாறியது.

அவரது மணவாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீள குடிப் பழக்கத்திற்கு அடிமையானார். "சாகேப் பீபீ அவுர் குலாம்' படம் மேலும் அவரது குடிப் பழக்கத்தை அதிகப்படுத்தியது. அதேசமயத்தில் நடிப்புத் திறமைக்காக பல விருதுகள் அவரைத் தேடிவந்தன.

1964-ஆம் ஆண்டில் கமல் அம்ரோஹியிடமிருந்து இவர் பிரிந்தது தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகும். அப்போது அவர் "பாகீஸô' படத்தில் நடித்துக் கொண்டருந்தார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம், 1972-ஆம் ஆண்டில் வெளிவந்தது. கமல் அம்ரோஹியிடமிருந்து பிரிந்தவுடன் புதுமுகமாக அறிமுகமான தர்மேந்திராவுடன் "பூல் அவுர் பத்தர்' (1966) படத்தில் நடிக்கும் போது தன் கடந்த கால வாழ்க்கையை மறக்கவும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் தர்மேந்திராவை காதலித்தார். ஆனால் இந்த உறவும் நீடிக்கவில்லை.

திரையுலகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் தன் சொந்த வாழ்க்கை பிரச்னைகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை. படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வராமல் குடிப்பழக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டார். தனிமை வாழ்க்கை அவரைக் கவிஞராக மாற்றியது. தன் மன வெளிப்பாடுகளை கவிதைகளாகவும் பாடல்களாகவும் எழுதினார். நூல் வடிவில் சில கவிதைகள் வெளியானபோது அதில் பெரும்பாலும் சோகத்தையே காணமுடிந்தது.

1967-68 ஆண்டுகளில் திரையுலகம் மாபெரும் மாற்றத்தைக் கண்டது. உடல் நலக் குறைவு காரணமாக அவர் ஐரோப்பாவுக்கு சென்றிருந்தபோது இவருக்கு ஆதரவளித்த டைரக்டர்களில் பிமல் ராய், குருதத், மெஹ்பூப் போன்றோர் காலமாயினர். மெஹ்பூப் தயாரிப்பில் 1954-ஆம் ஆண்டு "அமர்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அவரது இயக்கத்தில் இவர் நடித்ததில்லை. திரையுலக மாறுதல்களுடன் இவரால் ஒத்துப்போக முடியவில்லை. திறமையற்றவர்களுக்கு வாய்ப்பளித்து வர்த்தகரீதியாக மாறிய திரையுலகம் இவருக்குப் பிடிக்கவில்லை. இனி தன்னை போன்ற சுயமரியாதை உள்ளவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பில்லை என்று கருதி ஒதுங்கினார்.

இந்திய திரையுலகில் 20 ஆண்டுகளில் 80 படங்களுக்கு மேல் நடித்த மீனாகுமாரிக்கென்று தனிப்பெருமையும் உயர்ந்த இடமும் அளிக்கப்பட்டது. தன்னுடைய 40-ஆவது வயதை நெருங்க சில மாதங்களே இருந்த நிலையில் 1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீனாகுமாரி காலமானார். தன் வாழ்நாளில் அவர் திறமையான நடிகையாக மட்டுமன்றி, மனித நேயமுள்ளவராகவும் விளங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.