முகப்பு
தினமணி கதிர்

தாகூருக்கு 150ஆம் ஆண்டு விழா!: புயல் ஒரு படகு

கி.சந்திரசேகரன் என்றொரு எழுத்தாளர், கலை ரசிகர் இருந்தார் என்பது பலர் நினைவிலிருந்து மறைந்திருக்கலாம். அவர் தாகூர் பற்றி ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார் என்பதும்கூட இந்தத் தலைமுறையினருக்குத

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:29 PM
பகிர்:

கி.சந்திரசேகரன் என்றொரு எழுத்தாளர், கலை ரசிகர் இருந்தார் என்பது பலர் நினைவிலிருந்து மறைந்திருக்கலாம். அவர் தாகூர் பற்றி ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார் என்பதும்கூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவரைத் தாகூர் அறிஞர் என்பார்கள்.

அவர் நினைவாக, சமஸ்கிருத அகாடமியும் மியூசிக் அகாடமியும் இணைந்து தாகூரின் நூற்றைம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய விதம் புதுமையாக இருந்தது.

கி.சந்திரசேகரன் எழுதிய மூன்று நூல்களை மறுபதிப்பு செய்து, அதை வந்திருந்த அத்தனை பேருக்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதர் தாகூரை ரசித்தது போலவே பாரதியையும் எத்தனை ரசித்திருக்கிறார் என்பது நூலை அங்கங்கே புரட்டும்போது தெரிந்தது. அந்த வரிகளுக்கு அழகான ஆங்கில மொழிபெயர்ப்பும் அவற்றில் தந்திருப்பது இன்னும் சிறப்பு. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்று மூன்று மொழிகளிலும் வல்லுனரான கி. சந்திரசேகரன் குடும்பத்தார் கொண்டாடிய "தாகூர்-150' விழாவில் தாகூரின் படைப்புகளைப் பரதநாட்டிய வடிவில் வழங்கினர், மும்பைக் கலைஞர் வைபவ் அரேகரும், சென்னைக் கலைஞர் பிரியதர்சினி கோவிந்தும்.

வைபவ் எடுத்துக்கொண்டது "தேபோதார் க்ராஷ்' என்ற கவிதை. நதியைப் படகில் கடக்கும்போது, பெரும் புயல்காற்று வீசுகிறது. படகு தத்தளிக்கிறது. யாரோ கடவுளுக்கு நேர்ந்துகொண்டதைப் பூர்த்தி செய்யவில்லை. அதைச் செய்தால்தான் நாம் எல்லோரும் தப்புவோம் என்கிறார் படகோட்டி. துவக்கத்தில், ரகளை பண்ணும் குழந்தையை ரொம்பப் படுத்தினால் கடலில் வீசி விடுவேன் என்று தாய் சொல்லியிருப்பதைப் பிற பயணிகள் சுட்டிக் காட்ட, மிரண்டு போன தாய், ஐயோ நான் குழந்தையை அடக்கத்தான் அப்படிச் சொன்னேன் என்று கதறுகிறார். தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்திய இளைஞர் வைபவ், பண்பட்ட கலைஞர். இறுதியில் அவர் நடனத்தை முடித்தபோது ஈரமாகாத கண்கள் அரங்கில் இல்லை. எத்தனை உருக்கம் இருந்ததோ, அத்தனை நயம் இருந்தது. எத்தனை நயம் இருந்ததோ, அத்தனை அழுத்தம் இருந்தது. வங்காளி வார்த்தைகளும், பின்னணி இசையும் நடனத்துக்குக் கூடுதல் கனம் அளித்தன. வடக்கத்தி இசையோடு, கர்னாடக இசைக் கருவிகள் இணைந்தன.

இரு வகையான காதலை நடனத்தில் வெளிப்படுத்தினார் பிரியதர்சினி கோவிந்த். தன் காதலுக்காக எந்த அளவுக்கும் போகும் நாயகி சியாமாவின் பாத்திரத்தையும், காதல் புனிதமானது என்று கருதும் லாவண்யா பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு நடனமாடினார் பிரியதர்சினி கோவிந்த். நடனத்தை உச்சத்துக்கு உயர்த்தியது இசைதான். அதுவும் ரபீந்திர சங்கீதத்தையும், கர்னாடக சங்கீதத்தையும் இணைத்து வழங்கிய விதம் அருமை. இசையமைத்தவர் ராஜ்குமார் பாரதி என்று சொன்னால் போதுமே. கோமதிநாயகமும், ப்ரீத்தி மகேஷும், தமிழோடு வங்காளிப் பாடல் வரிகளையும் அத்தனை பாவத்துடன் பாடியதும், சிகாமணியின் வயலினும் சக்திவேல் முருகானந்தின் மிருதங்க வாசிப்பும்தான் நிகழ்ச்சியின் உயர்வுக்குக் காரணம். தமிழனால் எதுவும் முடியும் என்று தெரியாமலா சொன்னான் பாரதி!

பிரியதர்சினி கோவிந்துக்கு உடை அலங்காரம் பற்றி யாராவது நல்ல யோசனை கூறி, அவரும் அதைக் கேட்டால் அவருக்கு நல்லது!

முழு கட்டுரையைப் படிக்க →