"பொல்லாதவன்' படத்துக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கவிருந்த கதை, அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கத்தில் தற்போது படமாகிறது. "ஆடுகளம்' பட வெற்றிக்குப் பின் வெற்றிமாறனை வைத்து படம் எடுக்க அணுகினார் துரை தயாநிதி. கதையை கேட்டதும் தயாரிப்பு தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ""இல்லை... இந்தப் படம் புதுமுக இயக்குநருக்கானது, அதனால் என் உதவியாளரே இயக்குவார்'' என வெற்றிமாறன் சொன்னதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று படிக்கும் மாணவனுக்கு, பெங்களூர் பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்தக் காதல் நிறைவேறியதா என்பதை ஆக்ஷன், த்ரில்லர் பின்னணியில் சொல்லுவதுதான் "உதயம் என் எச் 4' படத்தின் கதை. படத்தின் பெருபான்மையான காட்சிகள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டுள்ளன. சித்தார்த் ஹீரோ. புதுமுகம் அஷ்ரிதா ஷெட்டி ஹீரோயின். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ்.
"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் அரசனாகவும், "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் எமதர்மனாகவும் நடித்து கவர்ந்த வடிவேலு அடுத்து தெனாலிராமன் அவதாரம் எடுக்கிறார். கைப்புள்ள, தீப்பொறி ஆறுமுகம், நாய் சேகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வசப்படுத்திய வடிவேலு, சொந்த பிரச்னை மற்றும் அரசியல் பிரவேசத்தால் சினிமாவைத் தவிர்த்தார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தினருடன் நாள்களை செலவிட்ட வடிவேலு, ரீ எண்ட்ரிக்காக காத்திருந்தார். அவரைத் தேடி தெனாலிராமன் கதாபாத்திரம் வந்தது. அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். "கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கிறார். பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "போட்டா போட்டி' படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். தெனாலிராமன் கேரக்டரைப் போல் கிருஷ்ணதேவராயர் கேரக்டரையும் வடிவேலுவே ஏற்கிறார்.
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய "3' படத்துக்குப் பின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படம் "எதிர்நீச்சல்'. சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அனிரூத் இசையமைக்கிறார். ஒரு பாடலுக்கு தனுஷூடன் ஆடியிருக்கிறார் நயன்தாரா. ""வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் பாஸிட்டிவாக அணுக வேண்டும். அப்போதுதான் கையில் எடுத்த எந்தகாரியத்திலும் வெற்றி கிடைக்கும் என்பதுதான் கதை. மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்க்கும் இளைஞனாக சிவகார்த்திகேயன், ஆசிரியையாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். தடகள பயிற்சியாளராக நந்திதா நடிக்கிறார். இந்த மூவரையும் சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகிறது. தனுஷ், நயன்தாரா ஆடிய பாடல் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் துரை செந்தில்.
தெலுங்கில் வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்ற "பிள்ள ஜமீன்தார்', தமிழில் "ஜமீன்' என்ற பெயரில் டப் ஆகிறது. பல கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான தாத்தா, தன் பேரனின் பொறுப்பில்லாத்தனத்தை பார்த்து அவனைத் திருத்த ஒரு திட்டம் போடுகிறார். எந்தவிதத் துணையும் இல்லாமல் ஹாஸ்டலில் தங்கிப் படித்துப் பட்டதாரியாகி விட வேண்டும். அப்போதுதான் என் சொத்துகளுக்கு வாரிசாக முடியும் என உயில் எழுதுகிறார். இதையடுத்து கிராமப்புற பகுதியில் உள்ள கல்லூரியில் தங்கி படிக்கிறார் பேரன். அப்படி தங்கி படித்த அவன் தாத்தாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை அடைந்தானா? என்பதே கதை. நானி, ராவ் ரமேஷ், ஹரிப்பிரியா, பிந்துமாதவி நடித்துள்ள இப்படத்தை அசோக் இயக்குகிறார்.
கலகலப்பான ஒர் இளைஞனின் வாழ்க்கையில் காதலும், பிரச்னையும் வந்து சேரும் போது அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்டு உருவாகும் படம் "யான்'. ஜீவா, துளசி நடிக்கும் இப்படத்தை ரவி கே.சந்திரன் இயக்குகிறார். அவசியம் ஹிட் தேவைப்படுகிற நிலையில், இந்தப் படம் பற்றி நம்பிக்கையாக பேசுகிறார் ஜீவா.
""நான் எல்லா இயக்குநர்களிடமும் கதை கேட்ட பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். படத்தின் வெற்றியும், தோல்வியும் என் கையில் இல்லை. இந்தியாவின் டாப் கேமிராமேன் ரவி.கே. சந்திரன் இயக்கும் இந்தப் படம் நம்பகமானது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு படத்தை உருவாக்குகிறார். ஹிந்தியில் 6 மாதங்களில் படத்தை வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். அந்த நிலை இங்கேயும் வர வேண்டும். ஆண்டுக் கணக்கில் படம் எடுப்பதால் படத்தின் கதை புதுப் பொலிவை இழந்து விடுகிறது'' என்றார் ஜீவா.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து உடனடியாக "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் அஜித். கடந்த வாரம் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். விதார்த், பாலா, முனீஸ், சந்தானம், ரமேஷ்கண்ணா, "நாடோடிகள்' அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில், நடிக்க ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார். வரும் 20-ம் தேதி வரை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. அக்டோபர் மாதம் நடக்கும் அறுவை சிகிச்சைக்குப் பின் அஜித் ஓய்வுக்கு செல்வதால், இடைப்பட்ட காலத்தில் படத்தின் பெருபான்மையான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தைப் போலவே இப்படத்துக்கும் அதிகாரப்பூர்வமான தலைப்பு வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.